"வேலை" நாம் பெற்ற வரம்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 17, 2024

"வேலை" நாம் பெற்ற வரம்...

"வேலை" நாம் பெற்ற வரம்...

வேலைப்பளு அதிகமென்றோ, வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சல் என்றோ  புலம்பாதீர்கள்.

இந்த வேலைதான்  சமூக அந்தஸ்தையும், மரியாதையையும், தனித்த அடையாளத்தையும் தருகிறது. இவை எல்லாவற்றை விடவும் நாம் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம் எனும் வாழ்வாதாரத்தையும்  வழங்கியது என்பதை மறந்து விட வேண்டாம்.

வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது. 

வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நம் வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்... வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம், வலி, வேதனை, ரணம், அவமானம், துயரம், துக்கம் மிக மிகப் பெரியது.

தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை... அதன் வீரியத்தை... வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. இங்கு எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுவதில்லை. 

உண்மையில், வேலைப் பளுவென்பதும்... சலிப்பென்பதும்... வேலையில் ஈடுபாடு இல்லாததால் வருவது.

நீங்கள் சலித்துக் கொண்டு பார்க்கும் இவ்வேலையை விட்டால், அதனைபா பெறுவதற்கு இலட்சக்கணக்கான  பேர் போட்டியிடுவர். அப்படிபட்ட வேலையை பெற்றிருக்கிறோம் என்ற பெருமையுடன் வேலை பாருங்கள்.

வேலை பார்க்கும் ஒவ்வொரு நொடிக்கும் ஊதியம் பெறுகிறோம். 

ஒரு நொடி கண் மூடி யோசித்துப் பாருங்கள்... இந்த வேலையில்லாமல் இருந்தால், நாம் ஒரு செல்லாக்காசு என்பது புலப்படும்.

 உடல் வலிமையோடு உள்ளவர்கள், ஓய்வு பெற்றவுடன் மன வேதனையில் ஒடிந்து உடல் வலிமை குன்றிப் போவதைக் காணலாம். 

படிப்பு முடிந்து தீரா வேட்கையோடு வேலையொன்றை எட்டிப் பிடிக்கப் போராடும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களின் போராட்டத்திற்கு முன்பு நம் வேலைப் பளுவெல்லாம் தூசுக்குச் சமம்.  

கொஞ்சம் கூடுதல் வேலை என்பது ரசித்து இன்முகத்தோடு எதிர் கொண்டால் மனம் சலிப்படையாது. மாறாக... உற்சாகம் அடையும்.  

வேலையென்பது நம் வாழ்க்கையின் ஆதாரம், அஸ்திவாரம். உண்மையில் கிடைத்த வேலையைச் சரியாக பார்க்கவில்லை என்றால், எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதைச் சிந்தித்து பாருங்கள்  பிறர் சரியாகப் பார்க்காததால் நாம் பட்ட கஷ்டத்தை எண்ணிப் பாருங்கள்.

எதற்காகவும்  உத்தியோகத்தைச் சலித்துக் கொள்ளாதீர்கள்.

வேலையென்பது சாபமல்ல. உழைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு.

ஒய்வு பெறும்வரை ஒவ்வொரு நாளும் இன்முகத்துடன் வேலைக்குச் செல்வோம். இயன்றளவு நேர்மையாகவும்,

அறத்துடனும் பணியாற்றுவோம்.

No comments:

Post a Comment