சென்னையில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 16, 2014

சென்னையில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற ஏடீஸ் கொசு மழைக்காலங்களில், நன்னீரில் தான் உற்பத்தியாகும். இதை ஒழிப்பதற்காக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி அதில் இருந்து ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாகி விடுகின்றன.
தற்போது சென்னையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதாக தகவல் வந்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணாநகர் மேற்கு, வசந்தம் காலனியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி கடுமையான காய்ச்சல் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.
சென்னை மாநகராட்சி மழைக்காலம் தொடங்கியதில் இருந்து டெங்குவை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, சென்னையை சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளில் புதிய காய்ச்சலால் யாரும் அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த அறிக்கையை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த தகவலை பெற்றதும், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரின் வீட்டை ஆய்வு செய்து, கொசு மருந்து தெளித்து, தொடர்ந்து அந்த பகுதிகளை கண்காணிப்பார்கள்.
அதன்படி, கல்லூரி மாணவியின் காய்ச்சல் பற்றிய தகவலை மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு, தனியார் மருத்துவமனை அனுப்பியது. சுகாதாரத்துறை அந்த மாணவியின் வீட்டில் உள்ள ஏ.சி., பிரிட்ஜ், சுற்றுப்புறத்தில் மழைநீர் தேங்கியுள்ளதா? குடிநீர் தொட்டி பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர்.
ஏடீஸ் கொசுவை ஒழிக்கும் மருந்தை தெளித்து, மறுநாள் அந்த வீட்டை சுற்றிலும் கொசு ஒழிக்கும் புகையை அடித்தனர். இந்த பணிகள் முறையாக நடைபெற்றதா? என்பதை அந்த மாணவியின் பெற்றோரிடம் சுகாதாரத்துறை அதிகாரி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
இதுபோல தனியார் மருத்துவமனையில் இருந்து டெங்கு பாதிப்பு தகவல்கள் வரும் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment