ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான சான்று கேட்கக்கூடாது - உயர்கல்வித் துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 5, 2015

ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான சான்று கேட்கக்கூடாது - உயர்கல்வித் துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பணி நியமனத்தில், தமிழ் வழிக்கல்வி என்பதற்கான சான்றுஅளிக்குமாறு கேட்கக்கூடாது என, உயர்கல்வித் துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள பாளையபுரத்தைச் சேர்ந்த எம். மல்லிகா, தாக்கல் செய்த மனு விவரம்: முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப 9.5.2013இல் உயர்கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, தாழ்த்தப்பட்டோருக்கான பெண்கள் பிரிவில், தமிழ் வழியில் படித்ததற்காக இடஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பித்தேன்.தேர்வில் வெற்றி பெற்றதால் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டேன். அனைத்து கல்விச் சான்றுகளையும் அதிகாரிகள் சரிபார்த்தனர். ஆனால், தமிழ் வழியில் படித்ததற்கு தனியாகச் சான்று அளிக்கவேண்டும் எனக்
கூறிய அதிகாரிகள், வாய்மொழியாக கால அவகாசம் அளித்தனர்.கடந்த 2014 ஆகஸ்ட் 6இல் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், என் பெயர் இடம் பெறவில்லை. எனக்கு உரிய இடஒதுக்கீடு அடிப்படையில் என்னை நியமனம் செய்யவேண்டும் என, உயர் கல்வித் துறை இயக்குநருக்கு மனு அளித்தேன். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என்னை முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக நியமிக்க உத்தரவிடவேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி டி. ராஜா பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் இடஒதுக்கீடு அடிப்படையில் 90 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், இவரை விட குறைவான மதிப்பெண் பெற்ற சிலரை ஒதுக்கீடு அடிப்படையில் நியமித்துள்ளனர்.தமிழ் வழியில் படித்ததற்கான சான்றை தாக்கல் செய்யாததால் மனுதாரருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் தனது கல்வித் தகுதிகள் அனைத்தையும்தமிழ் வழியிலேயே படித்துள்ளார்.
இதைக் குறிப்பிட்டே கல்விச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்பகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலும் தமிழ் வழியில் படிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் படித்ததற்கான பல சான்றுகள் இருக்கும்போது, தனியாக ஒரு சான்றை தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே, மனுதாரரை முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக 4 வாரத்துக்குள்உயர்கல்வித் துறை இயக்குநர் நியமிக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment