தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 17–ந்தேதி நடந்தது.
அன்றைய தினம் தமிழக கவர்னர் ரோசையா உரை நிகழ்த்தினார். இதில், தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதை தொடர்ந்து, 18–ந்தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் மறைந்த 6 எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.
பிப்ரவரி 23–ந்தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக் கட்சிகளும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
விவாதத்துக்கு அன்றைய முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசினார். சட்டமுன் வடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதன்பிறகு மார்ச் 25–ந்தேதி சட்டசபை கூடியது. இதில் அப்போதைய முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2015–2016–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 1–ந்தேதி வரை நடந்தது. விவாதத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சட்டசபைக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. பல்வேறு பிரச்சனைகளுக்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பட்ஜெட் விவாதத்துக்கு ஏப்ரல் 1–ந்தேதி ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசினார். மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கமாக மே மாதம் வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் இந்த ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதியுடன் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டதால் துறை ரீதியான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது மீண்டும் முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில், வருகிற 22–ந்தேதி அல்லது 23–ந்தேதி சட்டசபை மீண்டும் கூடும் என்று தெரிகிறது. முதல் நாளில், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
அதன்பிறகு தினமும் ஒவ்வொரு துறை சார்பிலும் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும். விவாதத்துக்கு பிறகு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.
புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். பின்னர் அவை நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தொடர் 2 வாரகாலம் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment