"தீதும் நன்றும் பிறர் தர வாரா..." - படித்ததில் பிடித்தது., - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, July 17, 2015

"தீதும் நன்றும் பிறர் தர வாரா..." - படித்ததில் பிடித்தது.,

மேஸ்திரி ஒருவர் தனக்கு வயதாகிவிட்டதால், வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல... தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர்,
‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கி விட்டாலும், அவரால் வழக்கமான முழு ஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏனோ தானோவென்று ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில் வீடு கட்டினார்.

‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி.

வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே... இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே!...
சே! இப்படி அநியாயமாக என்னை நானே ஏமாற்றி கொண்டேனே...’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
-------------------

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது...

கடவுள் என்னும் முதலாளி, நமக்கான வாழ்க்கையை நாமே வடிவமைக்க சில வாய்ப்புகளை தருகிறார்...

இதை அறியாமல், நாம் அலட்சியமாக இருந்து விடுகிறோம். பிறகு, நம் அலட்சியத்தால் உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழும் போது, அதிர்ச்சி அடைகிறோம்!

‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி.
ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம்...
ஆணி அடிக்கிறோம்...
ஜன்னல் பொருத்துகிறோம்...

நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும் தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

எனவே,
ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம்.
எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியாது...

ஆனால்,
"விதைப்பது அறுவடை ஆகும்..." என்பது மட்டும் நிச்சயம்...

ஆகவே,
நல்லதை விதைத்து நலமுடன் வாழ்வோம்...

No comments:

Post a Comment