கரூர், புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் அமைக்க ரூ.429.46 கோடியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கரூருக்கு ரூ.229.46 கோடி: கடந்த ஆண்டு சட்டப் பேரவை கூட்டத் தொடரில், கரூரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதன்படி, கல்லூரியைத் தொடங்க கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தல் ஆகியவற்றுக்காக ரூ.229.46 கோடிக்கு நிர்வாக ஒப்புதல்-நிதி ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டைக்கு ரூ.200 கோடி: இதுதவிர, புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க ரூ.200 கோடிக்கு ஒப்புதலை முதல்வர் வழங்கியுள்ளார். இதற்கான ஆயத்தப் பணிகளுக்காக ஒரு சிறப்பு அலுவலர் அல்லது முதல்வர் பணியிடத்தை உருவாக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 2,655-ஆக உயர்ந்தது: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கும் நோக்கத்தின் அடிப்படையில், ஆண்டுக்கு ஒன்று என மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு தொடங்கிவருகிறது.
இதன்படி, சிவகங்கை, திருவண்ணாமலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங்களில் தலா 100 மாணவர்களுடன் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, கடந்த 4 ஆண்டுகளில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழுமத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதனால், 1,945-ஆக மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 2,655-ஆக உயர்ந்துள்ளது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment