பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 6, 2016

பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிரியர் நியமனம் செய்ய போட்டித் தேர்வு வைக்கப்பட்டது. அதன்படி இரண்டு கட்டமாக 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை.

தற்போது மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அதிமுக அரசு, அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் போட்டித் தேர்வு குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாத கணக்கெடுப்பின்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையோ 460 தான். மேனிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரிகள் பணியிடம் 1065 தான் உள்ளது. மேற்கண்ட இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றாலும் போட்டித் தேர்வு நடத்த வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தினால் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருப்பதோ 460 இடங்கள் தான். அதனால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது ஒரு புறமிருக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment