இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த மனிதன், நகரமயத்துக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழிக்க தொடங்கிய நாள் முதல் பல கொடிய நோய்களின் தாக்கம் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருப்பது சர்க்கரை நோய் ஆகும். ஆங்கிலத்தில் சுகர் என்பர். இந்தியாவில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கம்ப்யூட்டர் முன் மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, வயல்களில் ஏற, இறங்கி உழைக்கும் கிராமப்புற வாசிகளும் இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பண்டை காலத்திலும் இந்த நோயின் தாக்கம் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் 70, 75 வயதுக்கு பிறகு தான் இதன் பாதிப்பு இருந்தது. ஆனால் இப்போது 30 வயதை கடந்தாலே சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் வந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு தான் இந்த நோய் வராமல் தடுப்பதற்கான தீர்வாக அமையும் என்கிறார் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் சங்கர்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உலகம் முழுவதுமே இந்த நோய் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயை பொறுத்தவரை டைப் 1, டைப் 2 என்ற இரு வகைகள் முக்கியமானவை. டைப் 1 என்பது குழந்தைகளாக இருக்கும் போதே பாதிப்பு தொடங்குகிறது. சில குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பி என்பது முற்றிலும் செயல்பாடற்ற நிலையில் இருக்கும். குழந்தைக்கு 5 வயதுக்கு மேல் ஆகும் போது தான், அதன் பாதிப்பை குழந்தையால் மெல்ல, மெல்ல உணர முடியும்.
அந்த மாற்றத்தை உடனடியாக கவனித்து தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொண்டாலும் அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் இன்சுலினை பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் உயிருக்கு ஆபத்தாகி விடும். டைப் 2 என்பது வயதான பிறகு இன்சுலின் அளவில் ஏற்படும் மாற்றம் மற்றும் பரம்பரை தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வரும். பெற்றோருக்கு இருந்தால் கண்டிப்பாக அந்த குழந்தைக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு வரும். எனவே 30 வயது கடந்தாலே உடனடியாக ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 5 வருடம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த 5 வருடமும் அவர்கள் முறையான சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நோயின் பாதிப்பு அதிகமாகி கண், இருதயம், கிட்னி, ரத்தகுழாய் உள்ளிட்டவை பாதிக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 45 நிமிடம் நடக்க வேண்டும். நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஆகியவை மிகவும் அவசியம் ஆகும். வெறும் ஜிம்முக்கு சென்று விட்டால் மட்டும் சர்க்கரை நோய் வராது என எண்ணக்கூடாது.
போதிய நடை பயிற்சி இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். வெறும் அரிசி சாதத்தில் குளுக்கோஸ் வேகமாக வெளியேறும். எனவே அரிசி அதிகம் சாப்பிடுவதும் ஆபத்தான ஒன்று தான். கேழ்வரகு, ராகி, கம்பு போன்றவை சாப்பிடும் போது, குளுக்கோஸ் மெதுவாக வெளியேறும். கோதுமையும் அதிகம் சேர் த்துக் கொள்ளலாம். ஒல்லியாக இருப்பவர்களுக்கு சுகர் வராது என்பதில்லை. பரம்பரை தன்மையால் உடல் பருமனாக இருக்கும் பலர் சர்க்கரை நோய் வராமல் இருக்கிறார்கள். எனவே ஒல்லியோ, குண்டோ உணவு கட்டுப்பாடு, நடை பயிற்சி போன்றவை இருந்தால் சுகர் வராமல் தடுக்க முடியும்.
No comments:
Post a Comment