மாணவர்களுக்கு பிளஸ் 1 புத்தகம் வழங்குவதில் அரசு மந்தம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 12, 2016

மாணவர்களுக்கு பிளஸ் 1 புத்தகம் வழங்குவதில் அரசு மந்தம்!


மாணவர்களுக்கு பிளஸ் 1 புத்தகம் வழங்குவதில் அரசு மந்தம்! அத்துடன் பாடநுால் கழகத்தில், இது குறித்துக் கேட்கும் பெற்றோரை, அவமரியாதை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கு வேகமாக மாணவர்
சேர்க்கை நடத்தி, ஜூன் முதல் வாரமே பாடங்களை துவங்கின.

அதிகாரபூர்வமாக, ஜூன், 23ல் தான் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்; ஆனால், பல அரசு பள்ளி களிலும், ஜூன் முதல் வாரத்திலேயே, பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு, தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், பிளஸ் 1 புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில், பொருளியல், என்ற, எகனாமிக்ஸ் புத்தகம் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.

தனியார் பள்ளி மாணவர்களுக்கோ, பல இடங்களில், காமர்ஸ் என்ற வணிகவியல், எகனாமிக்ஸ் என்ற பொருளியல், அக்கவுன்டன்சி என்ற கணிதப் பதிவியல் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் கிடைக்காத தால், பெற்றோரும், மாணவர்களும் தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையங்களை நேரடியாக அணுகினால், புத்தகம் இருப்பு இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

அதனால், வணிகவியல் மற்றும் பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில், தமிழ்நாடு பாடநுால் கழக தலைமை அலுவலகத்தில் இயங்கும் பாடநுால் கழக விற்பனை மையத்தில், பிளஸ் 1 புத்தக விற்பனைக்கு சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பாடப் புத்தகம் வாங்க செல்வோரை, அலுவலர்கள் தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:

கேட்கும் பாடப் புத்தகம் இல்லாவிட்டால், இல்லை என்று மட்டும் கூறுகின்றனர். எப்போது வரும்? எனக் கேட்டால், கோபப்படுகின்றனர். எந்தெந்த புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன என்பதை, தினசரி இருப்பு விவர அறிவிப்பு வைத்தால், அதை பார்த்து விட்டு வரிசையில் நிற்க மாட்டோம். வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று பாடப் புத்தகம் வாங்க சென்றால், இருப்பு இல்லை என, கூறி விடுகின்றனர்.

வரிசையில் நிற்கும் முன், புத்தகம் இருக்கிறதா எனக் கேட்டால், வரிசையில் வாருங்கள்; சொல்கிறோம் எனக்கூறி, நேரத்தை வீணடிக்கின்றனர். கல்வி சேவை வழங்கும் அரசு நிறுவனம் போல், இந்த மையம் செயல்படவில்லை. ஏதோ இலவச பொருளை வழங்குவது போல், முறை தவறி நடந்து கொள்கின்றனர். இதுகுறித்து, விற்பனை மையத்தின் மாடியில் இருக்கும் தலைமை அலுவலகத்தை அணுகினால், அங்கு உள்ளே யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை; வெளியே விரட்டி விடுகின்றனர்.

பாடநுால் கழக மேலாண் இயக்குனரை சந்திக்கவே முடியவில்லை. அவர் உயர் அதிகாரி என்றாலும், பெற்றோரின் குறைகளை கேட்க, தனியாக அதிகாரிகளை நியமிக்கலாம். அல்லது புகார் பதிவு மையங்களை திறக்கலாம். அது கூட இல்லாமல், பாடநுால் கழக நிர்வாகம் மோசமான நிலையில் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment