மத்திய அரசின் இறுதி கெடு நெருங்குவதால் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி நிரந்த ஆதார் மையங்களில் பதிவு செய்ய அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லுாரிகளில்
பயிலும் தாழ்த்தப்பட்ட பின் தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு, மத்திய அரசு உதவியுடன் இணைந்து பல்வேறு கல்வி நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கல்வி உதவித்தொகையைப் பெறுவதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, ஒரே மாணவர் இரு முறை கல்வி உதவித்தொகை பெறுவதை தடுக்கவும், உதவித்தொகை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தேசிய ஸ்காலர்ஷிப் போர்டலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன்படி http:// scholarships.gov.in என்ற இணையதளத்தில் கல்வி உதவி பெற உள்ள மாணவர்கள் தங்களது விபரத்தை பதிவு செய்து, ஆதார் எண்ணையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அத்துடன் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு நேரடி மானிய திட்டம் போல் விரைவில் வழங்கப்பட உள்ளது.
கல்வித் உதவித் தொகை பெற உள்ள பள்ளி மாணவர்களின் ஆதார் எண்ணை சேகரித்து, இம்மாதம் 31ம் தேதிக்குள் அந்தந்த மாநில அரசுகள் தேசிய ஸ்காலர்ஷிப் போர்டலை பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் 8,000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறுகின்றனர்.இவர்கள் விண்ணப்பிக்க குறுகிய காலம் உள்ள சூழ்நிலையில், இவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி கல்வித் துறை நிரந்தர ஆதார் மையங்களுடன் இணைந்து புது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதன்படி, பள்ளி ஆய்வாளர்கள், பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் ஆதார் எண் இல்லாத மாணவர்களை கண்டறிந்து அருகில் உள்ள ஆதார் நிரந்த மையத்திற்கு அழைத்து சென்று உடனடியாக பதிவு செய்ய உதவ வேண்டும்.
அதே போல், ஆதார் நிரந்தர மையங்களில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பள்ளி மாணவர்கள் வந்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக பதிவு செய்து அனுப்புவதோடு, போர்க்கால அடிப்படையில் அனைவரும் ஒருங்கிணைந்து செய்து முடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டியல் வெளியீடு
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 23 நிரந்தர ஆதார் சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் எந்த பள்ளிகளுக்கு எந்த ஆதார் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள், பள்ளி கல்வித் துறையின் http://schooledn.puducherry.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment