புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 28, 2016

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதிய கல்விக்கொள்கை பற்றிய மத்திய அரசின் அறிக்கையை இணையதளத்தில் தமிழில் படிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதுகுறித்து  மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
கல்வியில் பல்வேறு சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு நாடும் கடுமையாக பாடுபடுகின்றன. அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்வியை மறுஆய்வும் செய்து வருகின்றன. சுதந்திரத்துக்குப்பிறகு நாமும் பெரிய முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்காக முதலில் முதலியார் கமிஷனும், அடுத்ததாக கோத்தாரி கமிஷனும் நியமிக்கப்பட்டன. கல்விக்கான தேசியக்கொள்கை, 1986-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு, 1992-ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது. அன்றில் இருந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், தரமானகல்விக்கான நோக்கம், மாறிவரும் மக்கள் தொகையின் தேவைகள்ஆகியவற்றுக்காக தேசிய கல்விக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொடர் முயற்சிதான். கருப்பொருட்கள் பள்ளிக் கல்விக்காக 13 கருப்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகள் நலன், ஆசிரியப் பணி, மொழி போன்றவை அடக்கம். இவற்றை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல்ஒவ்வொருவரும் கருப்பொருள்கள் குறித்து யோசனை தெரிவிக்கலாம். உயர் கல்விக்காக 20 கருப்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாடு, திறந்த நிலை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, புதிய அறிவு போன்றவை இதில்அடக்கம். மேலும் பல கருப்பொருட்கள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. விவாதம் கடந்த 26.1.16 அன்றிலிருந்து www.My-G-ov.in என்ற இணையதளம் மூலமாக விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களுக்காக சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் மக்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. 31.10.15-க்குள் 29ஆயிரம் பதில்கள் பெறப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், அடிப்படையளவிலான கலந்தாலோசனை தொடங்கியது. அதன்படி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கிராமங்கள், 3 ஆயிரத்து15 வட்டாரங்கள், 406 மாவட்டங்கள், 962 உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய பகுதிகளில், பல்வேறு கல்விக் குழுக்களின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கருப்பொருட்கள் குறித்து விவாதித்து ஆலோசனை அளித்துள்ளனர். டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு பள்ளிக் கல்வி, உயர் கல்வி பற்றி 21 மாநிலங்கள் தங்கள் கருத்துகளை அளித்துள்ளன. அந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, கடந்த 2015-ம் ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 6 மண்டல கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் கலந்துகொண்ட மாநிலங்கள், தங்கள் கருத்தை கொடுத்துள்ளன. மேலும் பல மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் அந்த மண்டல கூட்டங்களில் பங்கேற்றனர். விரிவாக பேசப்பட்ட பிறகு பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டுள்ளன. அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து வகைப்படுத்துவதற்காக டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டது. ஆனால், புது கல்விக் கொள்கைக்கான வரைவை தயார் செய்வதற்காக அந்தக் குழு அமைக்கப்பட்டதாக சிலர் புரிந்துகொண்டனர்.

இந்தக் குழுவும் பல அமைப்புகளுடன் கூட்டம் நடத்தியது. 99 அமைப்புகளுடன் தனியாக 5 மண்டல கூட்டங்கள் நடத்தி 120 கருத்துகளைப்பெற்றது. அதன்பிறகு, தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவை தயாரிக்க பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அந்தக் குழு வழங்கியது. வரைவு அறிக்கை இந்தக் குழு வழங்கியிருப்பது, பரிந்துரைகள்தான், அது புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அல்ல. ஏனென்றால், அது அமைச்சரவையின் பார்வைக்கும் வைக்கப்படவில்லை. அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கவில்லை. அதாவது, புதிய வரைவு கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தியா சந்திக்கும் சவால்களை அணுகுவதற்கும், அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த புதிய கல்விக்கொள்கை ஐந்து தூண்களைக் கொண்டதாக இருக்கும். அணுகக்கூடியதாகவும், தரமுள்ளதாகவும், எளிதானதாகவும், சமபங்களிப்பதாகவும், பொறுப்புள்ளதாகவும், அதாவது இந்த 5 தூண்கள் அமைந்ததாக இருக்கவேண்டும். உண்மையான சவால் கடந்த 70 ஆண்டுகளாக வீடு வீடாக கல்வியை கொண்டுசென்றோம். ஆனால் இன்று கல்வியின் தரம் என்பதும் ஒரு சவாலாக உள்ளது. தொடக்கக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை அதை மேம்படுத்தியாகவேண்டும். புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் தரம்தான். கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும், அதை அனைத்து தரப்பினரிடமும் கொண்டுசெல்லவேண்டும் என்பதுதான் உண்மையான சவாலாக உள்ளது. எனவே, இதற்கு ஏற்ற கருத்துகளை அனைவருமே தரவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

தமிழிலும் காணலாம்

கருத்துக்களை அனுப்பும் தேதியை செப்டம்பர் 30-ந் தேதிவரை நீட்டித்துள்ளோம். (mh-rd.gov.in/sites/upl-o-ad_fi-les/mh-rd/fi-les/ nep/tam-il.pdf ) என்ற இணையதளத்தில் 99 பக்க புதிய கல்விக்கொள்கைக்கான தமிழ் வரைவு அறிக்கையை காணலாம். இதற்கிடையே புதிய கல்விக் கொள்கையில் அரசியல் விளையாட்டை நடத்த சிலர் முற்படுகின்றனர். இது நடந்துவிடக்கூடாது என்று அச்சம் கொண்டுள்ளேன். ஏனென்றால், அது ஒரு கட்சியின் கோட்பாடு அல்ல. கல்வி என்பது தேசிய கோட்பாட்டைக் கொண்டதாகும். எனவே, இதில் தவறான கருத்துகளை பரப்புவது, உள்நோக்கத்தோடுசந்தேகங்களை கிளப்புவது போன்றவை தேவையற்றது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30ம் ஷரத்துகள் அளிக்கும் உரிமையை நசுக்குவதாக போராட்டம் நடத்துவதாக அறிகிறேன். அரசியல் சாசனம் தந்துள்ள எந்த உரிமையும் நசுக்கப்படமாட்டாது என்பதையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், சமுதாயத்தில் பின்தங்கிய அனைவருக்கும் கல்வியில் சமமானவாய்ப்பு அளிக்கப்படும் என்பதையும் இதன்மூலம் உறுதி அளிக்கிறேன்.

வலுவான கொள்கை

இதில் பிரதமர் நரேந்திர மோடி மிகத்தெளிவாக இருக்கிறார். 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த மாநிலங்களுக்கு இடையேயான கூட்டத்தில் பேசப்பட்ட 4 தலைப்புகளில் கல்வியின் தரமும் அடங்கும். நானும் அதில் கலந்துகொண்டேன். இதுபற்றி அனைத்து முதல்-மந்திரிகள் கூறிய கருத்தும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தரமான கல்விக்காக தேவை பற்றி அவர்கள் உரையாற்றினர். அது ஒரு நல்ல தொடக்கமாக உணர்ந்தேன். அனைவரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துகளை தெரிவிக்கும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நமது வாரிசுகள், சவால்களை எதிர்கொள்ளவும், இந்தியாவின் எதிர்காலத்தை ஒளி மிகுந்ததாக கொண்டுசெல்வதற்கான ஒரு வலுவான கல்விக்கொள்கையாக அது அமையவேண்டும்.

No comments:

Post a Comment