10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 31, 2016

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு
(Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

S வகையினர்

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் பாடத்தை பொறுத்தவரை செய்முறை (Practical) தேர்வில், தேர்ச்சிப் பெற்று, அறிவியல் கருத்தியல் (Theory) தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் கருத்தியல் தேர்வெழுதவும், செய்முறை தேர்வில் தோல்வியுற்று, கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
SP வகையினர்

14 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிக்/ஆங்கிலோ இந்தியப் பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறைப் பயிற்சிப் பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வு உட்பட அனைத்துப் பாடங்களிலும் மீளத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 2016 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடும் முன்பு வரை அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு 80 சதவீதம் வருகையுடன் பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றுடன் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுத தகுதியுடையவராவர்.

எக்காரணம் கொண்டும் அறிவியல் செய்முறைப் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மொழிப்பாடம்

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் நேரடி தனித்தேர்வர்கள் (SP வகையினர்) மொழிப்பாடம் பகுதி – Iல் தமிழ் மொழியில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர் (S வகையினர்) பகுதி – Iல் பிற மொழிப்பாடங்களில் (Other Language) தோல்வியுற்றிருப்பின், செப்டம்பர்/அக்டோபர் 2016 தேர்வில் அன்னார் தோல்வியுற்ற பிறமொழியில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

அரசுத் தேர்வு சேவை மையங்கள்

ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே அரசுத் தேர்வு சேவை மையங்கள் (Government Examinations Service Centres) அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலர் அலுவலகங்களிலும் இவ்விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை:

அரசுத் தேர்வு சேவை மையங்களில் (Government Examinations Service Centres) நேரடியாக சென்று விண்ணப்பிக்க இயலாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித்தேர்வர்கள், செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இத்துறையின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் தேர்வரின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் மூலம் சென்னை – 6 அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களை மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் பயின்று தமிழ் நாட்டில் செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இடப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate) மற்றும் இணைச் சான்றிதழ் (Evaluation Certificate) பெற்று அவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அரசுத் தேர்வு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

கருத்தியல் தேர்வு (Theory Exams)

தேர்வுக் கட்டணம் ரூ.125/- உடன் கூடுதலாக ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- ஐ சேர்த்து மொத்தம் ரூ.175/- பணமாக அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்துதல் வேண்டும்.

தேர்வுக் கட்டண விலக்கு

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கவிலக்களிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சலுகைகள்:

தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரத்தினை பாடத்திட்டம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு மையம்

தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

தேர்வுக்கூட அனுமதி சீட்டு

ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (Admission Certificate) பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

S வகையினர்

ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்.
அறிவியல் பாடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
SP வகையினர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்றுச் சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல் (அல்லது)
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினில் தேர்ச்சி பெற்றமைக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்
அறிவியல் பாடத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி ஏற்கனவே முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
மெட்ரிக் /ஆங்கிலோ இந்தியன் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் அன்னாரின் அனைத்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஒப்படைத்தல் வேண்டும்.

மேற் குறிப்பிட்டுள்ள இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே  ஆன்லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

சிறப்பு அனுமதி திட்டம்

மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (Takkal) 16.09.2016 மற்றும் 17.09.2016 ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment