அரசு பள்ளியில் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் - ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 2, 2014

அரசு பள்ளியில் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் - ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி

மதுரவாயலில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.  புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36). கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  
அப்போது பிளஸ்-2 மாணவன் ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டார். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் லட்சுமி கண்டித்தார். 

         ஆத்திரம் அடைந்த மாணவன் ஆகாஷ் திடீரென ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியை லட்சுமி நிலை குலைந்தார்.  ஆசிரியை தாக்கப்பட்ட  தகவல் பள்ளி முழுவதும் பரவியது. இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி இன்று பள்ளிக்கு வந்தார். காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். 

          அவரை பரிசோதித்த டாக்டர்கள் காது ஜவ்வு கிழிந்து இருப்பதாகவும் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு விசாரணை நடத்தினார். 

            இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி துறை அதிகாரி சுவாமிநாதன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.  மாணவன் ஆகாஷ் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஆசிரியையை தாக்கினார். அதற்கு மன்னிப்பு கடிதம் வழங்கியதால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். இபபோது மீண்டும் அவன் ஆசிரியையை தாக்கியதால் அவனை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment