தமிழகத்தில் தற்போது ஆங்கிலம் மீது ஏற்பட்டுள்ள மோகத்தால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக அரசு துவக்கப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்தது.
இதனைத் தவிர்க்க தமிழக அரசு, கடந்த 2012-13ம் கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்பு துவங்க அனுமதி கோரினால் அதற்கான அனுமதியை அரசு வழங்கும் என அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில், கடந்த 2012-13ம் கல்வியாண்டில் 5 பள்ளிகளும், 2013-14ம் கல்வியாண்டில் 106 பள்ளிகளும், 2014-15ம் கல்வியாண்டில் 55 பள்ளிகள் என இதுவரை மாவட்டத்தில் 166 பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக வரும் கல்வியாண்டான 2015-16ல் இதுவரை 9 பள்ளிகளில் இருந்து ஆங்கில வழிக் கல்வி துவங்க பள்ளிகள் சார்பில் மாவட்ட கல்வித் துறைக்கு விண்ணப்பம் அளித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் கல்வித்துறை இயக்குனரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment