பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக 7 மாணவர்களின் பெயர்களை தேர்வுப் பட்டியலில் இருந்து தனியார் பள்ளி நிர்வாகம் நீக்கி உள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள அரசு உதவி பெறும் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சரவணக்குமார், கலையனூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகள் மூவிதா, வேலு மகள் ஜோதிகா, சேகர் மகள் ராணி, ராமராஜ் மகன் ராஜசிங்கம், பனையூரைச் சேர்ந்த இருளப்பன் மகன் இன்பராஜா, முதலூரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் கர்ணன் ஆகிய மாணவர்களை அரசு தேர்வு எழுத முடியாத வகையில் தேர்வு பட்டியலில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியதாக கூறப்படுகிறது.
அதனால் இந்த மாணவ - மாணவிகள் வரும் அரசு பொதுத் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மெல்லக் கற்கும் மாணவர்கள் என்பதால் 100 சதவீத தேர்ச்சியை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. இப்பள்ளியில் இருந்து 65 மாணவ - மாணவிகளின் பட்டியல் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த 7 மாணவர்களின் பெயர் விடுபட்டுள்ளது.
இதை அறிந்ததும் இந்த மாணவ - மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மண்டல துணைச் செயலர் ராஜு, பள்ளி நிர்வாகத்திடமும், முதன்மைக் கல்வி அலுவலரிடமும் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.ஜெயக்கண்ணு, மாவட்டக் கல்வி அலுவலர் எம்.உசேன் கான் ஆகியோர் பள்ளியில் நேற்று விசாரணை செய்தனர்.
இந்தப் புகார் தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.ஜெயக்கண்ணு கூறியதாவது: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் வழங்கிய பட்டியலில் 7 மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை செய்தபோது, இந்த மாணவ - மாணவிகளைத் தேர்வு எழுதவிடாமல் செய்யும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டது தெரியவந்தது.
இவர்களது பெயரை தேர்வுப் பட்டியலில் சேர்க்க கல்வித் துறை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளேன். அதன்படி இம்மாணவர்களின் பட்டியலை சென்னைக்கு எடுத்துச் செல்ல தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment