சம்பளம் மற்றும் டெபாசிட் பணத்தை எடுக்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் நேற்று வங்கிகளில் குவிந்தனர். வழக்கம் போல் பணத்தட்டுப்பாட்டால் ஏடிஎம்கள் முடங்கின.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்பை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் வங்கிகளுக்கு படை யெடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வழங்க போதிய அளவுபுதிய ரூபாய் நோட்டுகள் இல்லாமல் வங்கிகள் திணறி வருகின்றன.
பணமதிப்பு நீக்க அறிவிப்பு கடந்த மாதம் 8-ம் தேதி வெளியிடப் பட்டதால் அதற்கு முன்பாக பெரும் பாலான ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து சம்பளப் பணத்தை எடுத்துவிட்டனர். இந்நிலையில், நேற்று சம்பள தினம் என்பதால் பலர் ஊதியத்தை எடுக்க வங்கி ஏடிஎம்களுக்குச் சென்றனர். ஆனால், பணம் இல்லாததால் பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படவில்லை.
இதையடுத்து, பொதுமக்கள் வங்கிகளுக்குச் சென்றனர். வங்கிகளில் ரூ.10 ஆயிரம் வரை பணம் வழங்கப்பட்டது. அதுவும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட்டதால் அவற்றை சில்லறையாக மாற்றும் கவலை மக்களுக்கு ஏற்பட்டது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களை வைத்திருப்பவர்கள் நேற்று பணம் எடுக்க சிரமப்பட்டனர்.
வங்கிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாயினர். சில வங்கிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வாடிக்கையாளர் களுக்கு டோக்கன் வழங்கப் பட்டது. அந்த டோக்கனை பெற மக்கள் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சில வங்கி களில் வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் கால் கடுக்க நின்றும் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வங்கி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சில வங்கிகளுக்கு போலீஸ் பாது காப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, “முன்பை விட தற்போது 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் விநியோகிக்கப்படுகின்றன. எனவே படிப்படியாக நிலைமை சீரடையும்” என்றார்.
No comments:
Post a Comment