மாணவர்களின் மன அழுத்தம், சமூகப் பார்வை ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணும் வகையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஒரு முன்மாதிரி முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, மாணவ, மாணவிகளுக்கு வீதி நாடகப் பயிற்சியளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்), முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் (பிஎச்.டி) உள்ளிட்ட நூறு மாணவர்கள் கொண்ட குழுவினருக்கு வீதி நாடகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இளம் வயதுத் திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு, பெண்கள் மீதான வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்த கருத்து உருவாக்கம் (தீம்) செய்யப்பட்டு, அதில் மாணவ, மாணவிகளுக்கு உடல் மொழி, குரல் வளம், நடிப்புத் திறன் ஆகிய பிரிவுகளில் பயிற்சியளிக்கப்பட்டது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி மூலமாக மாணவர்களுக்கு சமூகம் மீதான பார்வை மாறியிருப்பதாகக் கூறுகிறார் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் வி.சங்கீதா.
தங்களின் எதிர்காலம் குறித்த பதற்றம், தேர்வு பயம், ஒரே மாதிரியான வாழ்க்கை முறை குறித்த சலிப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை விடுவிக்கும் முயற்சியாக நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி முகாமை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டதாக, வீதி நாடகப் பயிற்சியாளர் சத்ய மாணிக்கம் தெரிவித்தார்.
தங்களைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தப் பயிற்சி முகாம் வாய்ப்பளித்ததாகவும், இதனை பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் எதிர்காலத்தில் பயன்படுத்துவோம் என்றும் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
நல்ல முயற்சி. இதை பிற கல்வி நிறுவனங்களிலும் தொடரலாமே?
No comments:
Post a Comment