ஒட்டன்சத்திரம் அருகே கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டுபிடிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 31, 2015

ஒட்டன்சத்திரம் அருகே கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டுபிடிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு மலை தொடர்ச்சி மலையில், பச்சைமலை அடிவாரத்தில், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:மேற்கு மலை தொடர்சி மலையின் ஒரு பகுதியான பச்சை மலை அடிவாரத்தில் ஆர்வளர்கள் பெருமாள், ஆறுமுகம், மனோஜ்குமார், தங்கவலசு ஆகியோர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், ஆயுதங்கள், பானை ஓடுகள் என 64 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பழைய கற்காலத்தின் இறுதிப் பகுதியில் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்கால கருவிகள் 6 கண்டுபிடிக்கப்பட்டன. இவை கற்கால மனிதர்களால் வேட்டையாடப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகும். இத்துடன் புதிய கற்காலத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செவ்வக வடிவ கற்கள் 26, சதுர வடிவக் கருவிகள்19, நீள் செவ்வக வடிவ கருவிகள் 10, விசிறி போன்ற அமைப்புடன் கூடிய கருவிகள் 2, ஒரு தேய்ப்புக்கல் உள்ளிட்ட 58 கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய கற்கால தொடக்கத்தில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த விதவிதமான அளவுகளில் உள்ள கருவிகள் வேட்டையாடுதல் மற்றும் ஆயுதங்களை உருவாக்கப்பயன்படுத்தியவை ஆகும். சதுர, செவ்வக வடிவிலான கற்கள் எடைக்கற்களாக பயன்பட்டிருக்கலாம். விசிறி போன்ற அமைப்புள்ள கருவிகளும் தேய்ப்புக் கல்லும் மூலிகைகளை அரைக்கப் பயன்பட்டிருக்கலாம்.

புதிய கற்காலத்தின் தொடக்கமும், தமிழ் முதல் சங்க காலமும் ஏறத்தாழ சமமான கால கட்டத்தை கொண்டிருக்கிறது. முதல் சங்க காலத்தை சேர்ந்த தமிழர்கள் இந்த கருவிகளை உருவாக்கி பயன்படுத்தியிருக்கலாம். இத்துடன் மூன்றாம் சங்க காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும், ஆட்டாங்கற்கள் இரண்டும் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இங்குள்ள பாறையில் 12 கற்குழிகள் (உரல்) காணப்படுகின்றன, இவை சங்க கால மக்கள் உணவு தானியங்களை குத்தவும், அரைக்கவும் பயன்படுத்தியவை ஆகும். இப் பழக்கம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. இங்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பச்சை மலையில் மனிதனின் நடமாட்டமும் வாழ்க்கையும் பழைய கற்காலத்தில் இருந்தே (சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுககு முன்பு) இருந்தது என்பது உறுதியாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment