நடந்து முடிந்த காலாண்டு தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த விபரங்களை சேகரித்து, இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த இரு ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதில், கல்வித்துறை அலுவலர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளில், காலாண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மதிப்பெண் விவரங்களை தொகுத்து, அதில், மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம், கடந்த மாதம் வரை, நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வுகளின் தேர்ச்சி விகிதம், அதிலிருந்து காலாண்டு தேர்வில், ஏற்பட்ட தேர்ச்சியின் மாற்ற சதவிகிதம் உள்ளிட்ட விபரங்களை பள்ளி வாரியாக தொகுத்து, அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும், காலாண்டு தேர்ச்சி சார்பான விவரங்களை தனித்தனியாகவும், முதல் பருவத்தேர்வு மற்றும் காலண்டு தேர்வு வித்தியாச விவரங்களையும் தொகுத்து, அக்டோபர், 5ம் தேதிக்குள், கல்வித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், நோடல் அலுவலராக நியமிக்கப்பட்ட, இணை இயக்குனர் தலைமையில், ஆய்வு நடத்தப்படும். தொடர்ந்து நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கப்படும்.
No comments:
Post a Comment