உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதியை பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில், குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியில் எவ்வித மாற்றமும் செய்யாது, மாநில அரசுகள் விரும்பினால் உயர்த்திக்கொள்ளலாம், என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
பல்கலை, கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு, யு.ஜி.சி.,-2010 வழிகாட்டுதலில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தகுதிகள் தொடர்பாக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாநில உயர்கல்வித் துறை அதிகாரிகள் உட்பட பலதரப்பட்டோர் பல்வேறு கோணங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மாநில அரசுகள் பல்கலை, கல்லுாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதியை உயர்த்துவது, தொடர்புடைய பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி, இளங்கலை மற்றும் முதுகலையில் வேறு பாடங்களை படித்தவர்கள் தகுதியானவர்களா என்பன உள்ளிட்ட கேள்விகளும், அதற்கான விளக்கமும் www.ugc.ac.in என்ற யு.ஜி.சி., இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. மாநில அரசு ஆசிரியர்களின் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, ஆசிரியர் நியமனத்தில் யு.ஜி.சி., வழிகாட்டுதலை பின்பற்றுவது கட்டாயம். இருப்பினும், மாநில அரசு விரும்பினால், யு.ஜி.சி., 2010 வழிகாட்டுதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதியில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதை உயர்த்திக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பல்கலை விதிமுறைகள் பின்பற்றப்படாத இக்காலகட்டத்தில், மாநில அரசு விரும்பினால் ஆசிரியர் நியமன தகுதியை உயர்த்திக் கொள்ளலாம் என்பது பொருந்தாத ஒன்று. இந்த விஷயத்தில் கல்வி நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் முடிவெடுக்கும் வாய்ப்புள்ளது; கல்வித் தரமும் பாதிக்கப்படும். தமிழகத்தில் பொது பல்கலை விதிமுறைகளை அமல்படுத்தினாலே போதுமானது என்றார்.
No comments:
Post a Comment