அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதற்கென தனி வகுப்பு நேரம் (பீரியட்) ஒதுக்கி, முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய கண்காணிப்பை அமல்படுத்தினால் மட்டுமே திட்டம் மாணவர்களைச் சென்றடையும் என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக மொழி ஆய்வகம் எனும் சிறந்த திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிமுகம் செய்தது. முதல்கட்டமாக 60 அரசுக் கலைக் கல்லூரிகள், கல்வியியல் நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு, பின்னர் பிற அரசுக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கல்லூரிகளில் ஆய்வகம் அமைக்கத் தேவையான கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.5.5 லட்சம் நிதி 2009-இல் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 60 கல்லூரிகளிலும் 10 கணினிகளுடன் கூடிய மொழி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் திட்டம் இப்போது பெரும்பாலான கல்லூரிகளிலும் செயலிழந்து போயுள்ளதாக பேராசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: மொழி ஆய்வகத்துக்கென வகுப்பு நேரம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதனால், ஆங்கிலப் பேராசிரியர்கள் வகுப்பு எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மொழி ஆய்வகத்துக்குச் செல்வதில் நேரம் இல்லாததோடு, ஆர்வமும் காட்டுவதில்லை.
இதனால் திட்டம் அறிமுகம் செய்த ஒரு சில ஆண்டுகள் மட்டுமே இந்த ஆய்வகங்களை மாணவர்கள் பயன்படுத்தினர். அண்மைக்காலமாக மொழி ஆய்வகத்துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவதே இல்லை. எனவே, மொழித் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை பாடத் திட்டத்துடன் சேர்க்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் முழுமையான பயனைப் பெறுவர் என்றனர். இதுகுறித்து நந்தனம் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வர் கே.என். பிரபு கூறியது: இந்தத் திட்டத்தின் கீழ் கல்லூரி ஒன்றுக்கு 10 முதல் 20 கணினிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அரசுக் கல்லூரிகளில் சராசரியாக 1,500 முதல் 4 ஆயிரம் மாணவர்கள் வரை படிக்கின்றனர். இத்தனை மாணவர்களுக்கும் 20 கணினிகளைக் கொண்டு பயிற்சி அளிப்பது சாத்தியமில்லாத ஒன்று. இந்தத் திட்டம் செயல்படுகிறதா என்பதை ஆண்டுக்கு ஆண்டு கேட்டறிய வேண்டும். மாணவர்களிடமும் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment