எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகள் குறித்து முடிவு செய்ய குழு அமைப்பது குறித்து மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.
தங்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை எம்.பி.,க்களே நிர்ணயம் செய்யக்கூடாது என கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், இது பற்றி முடிவு செய்ய குழு அமைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது. மூன்று பேர் கொண்ட குழு அமைத்து எம்.பி.,க்களின் சம்பளம் மற்றும்
படிகள் குறித்து முடிவு செய்யலாம் என மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செய்தியில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், வரும் 29ம் தேதி முதல் பார்லிமென்ட் கொறடா மற்றும் எதிர்க்கட்சிகளின் கொறடா கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு எம்.பி.,க்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டது. எம்.பி.,க்களின் சம்பளம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தியாவில் ஒரு எம்.பி.,க்கு மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. பார்லிமென்ட் கூட்டத்தொடர், அல்லது பார்லிமென்ட் குழு கூட்டத்தின் போது, ரிஜிஸ்டரில் கையெழுத்திடும் எம்.பி.,க்கு தினமும் ரூ.2000 படியாக வழங்கப்படுகிறது. எம்.பி.,க்கு தொகுதி படியாக மாதம்தோறும் ரூ.45 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 15 ஆயிரம் செலவுக்காகவும், ரூ.30 ஆயிரம் உதவியாளர்களுக்கு சம்பளமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், விமானம் மற்றும் ரயில்களில் எம்.பி.,க்கள் இலவசமாக செல்லலாம். வாகனம் வாங்க எம்.பி.,க்களுக்கு ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment