பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
தற்போது அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலா, அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஐ.நா. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மலாலா, “கல்வி என்பது சலுகை கிடையாது, அது உரிமை. மேலும் கல்வி தான் உலகத்தில் அமைதியை கொண்டுவரும். சிரியா விஷயத்தில் உலகம் மனிதநேயத்தை இழந்துவிட்டது.
உலகம் முழுவதும் பல லட்சம் குழந்தைகள் போர் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக தலைவர்கள் தங்கள் சொந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டால் எப்படி தீவிரமாக எடுத்துக்கொள்வார்களோ அதுபோல் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என ஐ.நா. பொதுச்சபையின் 70-வது கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment