மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து (டிஇடி) செய்ய வேண்டும், 6-வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ மாவட்ட தொடர்பாளர்கள் கே.சத்தியநாதன், எஸ்.லிங்கேசன் ஆகியோர் தலைமையில் சுமார் 500 ஆசிரியர்கள் திரண்டனர். கோரிக்கைகளை முழங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மறியல் செய்வதற்காக கோட்டையை நோக்கி புறப்பட் டனர். அவர்களை அங்கு குவிக்கப் பட்டிருந்த போலீஸார் தடுத்து கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஜாக்டோ உயர்நிலைக் குழு உறுப்பினர் எஸ். சங்கரபெருமாள் கூறியதாவது:
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டத்தை தொடங்கி யுள்ளோம். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைதாகியுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.
எங்களின் போராட்டம் 31-ம் தேதி (இன்று) மற்றும் பிப்.1-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கும். தமிழக அரசு உடனடியாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment