தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் அனைத்து மண்டலம், பகுதி, கோட்ட அலுவலகங்கள், சென்னை. மதுரை, திருச்சி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 465 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களில் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்களுக்கு ரூ.50-ம், சமூக நலத்துறை உதவித் திட்டங்களுக்கு ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இ-சேவை மையங்களில் சொத்து வரி, தொழில் வரி கம்பெனி வரியையும் செலுத்தலாம். தற்போது இம்மையங்களில், மின் கட்டணங்களை செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, மத்திய அரசின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் தொடர்பான சேவை, அரசுப் பணியாளர் தேர்வாணய தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது, இ-சேவை மையம் தொடர்பான தகவல்களை கைபேசியில் தெரிந்துகொள்ளும் வகையில் ‘TACTV’ என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டில் இயங்கும் கைபேசிகளில் மட்டும் செயல்படும். இந்த செயலியை பொதுமக்கள் ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதைப் பயன்படுத்தி, இ-சேவை மையங்களின் முகவரி, வரைபடம், அருகில் உள்ள மையத்துக்கு செல்லும் வழி, சேவைகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment