ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 30, 2016

ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால், பிப்., 1ல் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று துவங்கி, வரும் திங்கள் வரை நீடிக்கும், ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், சனி, ஞாயிற்றுக் கிழமை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். போராட்டத்தின், மூன்றாவது நாளான பிப்., 1 பள்ளி வேலை நாள். தமிழகம் முழுவதும், 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால், அன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அரசு கிடுக்கிப்பிடி வகுப்புக்கு வராமல் போராடும் ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சம்பளப் பிடித்தம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

'தற்செயல் விடுப்பு கடிதம் கொடுத்தால் அதை ஏற்கக் கூடாது; போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியலை அரசுக்கு தொகுத்து அனுப்ப வேண்டும்' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாற்று ஏற்பாடு என்ன? பிப்., 1ல், பள்ளிகளுக்கு முழுக்கு போட்டு விட்டு, ஆசிரியர்கள் மறியல் செய்யச் சென்றால், வகுப்புகள் முடங்கி விடும். எனவே, அந்த நாளில் அனைவருக்கும் கல்வி இயக்ககமான எஸ்.எஸ்.ஏ.,வில் பணியாற்றுபவர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் வகுப்புகளை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர் போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை, அரசு அழைத்து பேசுவதுடன், வாக்குறுதி அளித்த கோரிக்கைகளை உடனடியாக, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடையும்.

No comments:

Post a Comment