தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் 23ம் தேதி தேர்தல் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,
ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தெரிய வந்ததும், அதற்கு தேர்தலை ஒத்திவைப்பது ஒரு வழிமுறையாகாது என்றும், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்துவிட்டு புதிதாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இந்த கருத்தை வலியுறுத்தி, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பாஸ்கரன், தஞ்சை பாஜக வேட்பாளர் ராமலிங்கம், அரவக்குறிச்சி வாக்காளர் தனசேகரன், திருஞானசம்பந்தர் என்ற மூத்த வழக்குரைஞர், திருநெல்வேலியைச் சேர்ந்த யோகம், தங்கராஜ் உட்பட 5 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறாது என்று நீதிபதிகள் அறைக்குச் சென்ற தேர்தல் ஆணைய வழக்குரைஞர் நிரஞ்சன் கூறியுள்ளார்.இந்த தகவலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை இன்று மாலை நீதிமன்ற அமர்வு முன்பு வரும் போது இதனை தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.பணப்பட்டுவாடா நடந்தது தெரிய வந்தால் வேட்பாளரை மாற்ற வேண்டும். அதற்கு கட்சிகளுக்கு அவகாசம், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மனு தாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையரும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் வீடியோ கான்பரன்சிங்கில் பேசினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு தான் இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment