புதிய வரி மசோதா குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதையடுத்து கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கிய தங்கம் உள்ளிட்ட நகைகளுக்கு வரி கிடையாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அதாவது பரம்பரை நகைகள் உட்பட தங்க நகைகள் மீது வரி உண்டு என்று வதந்திகள் பரவ, மத்திய அரசு விளக்கம் அளிக்கும் போது, “கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கும் தங்கம் மற்றும் நகைகள், குடும்பத்தில் வழிவழியாக வந்த நகைகள் ஆகியவை ஏற்கெனவே உள்ள சட்டவிதிகளின் படியோ அல்லது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்த விதிகளின் படியோ வரி கிடையாது என்று தெளிவுறுத்துகிறோம்” என்று அறிக்கை ஒன்றில் மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், “சட்டபூர்வமாக எந்த அளவுக்கு நகை வைத்திருந்தாலும் அதற்கு வரி கிடையாது” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் வரியை நிர்ணயிக்கும் அதிகாரியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, “இது தொடர்பான அதிகாரி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அந்தஸ்து, அதன் பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், அந்த குடும்பம் சார்ந்த சமூகப் பிரிவு மற்றும் சில விவரங்களை பரிசீலித்து அந்த குடும்பத்திற்குச் சொந்தமான பெரிய அளவிலான நகைகளை பறிமுதல் செய்வதா அல்லது இல்லையா என்பதை முடிவெடுக்கலாம். சோதனைக்கு உத்தரவிடும் வருமான வரி ஆணையர்/இயக்குநருக்கு சோதனை அறிக்கை அளிக்கும் போது இந்த விவரங்களை அளிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment