காஞ்சிபுரம் தியாகிகள் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவருகிறார், சக்தி. நண்பர்களுடன் பாசிமணி விற்றுக்கொண்டிருந்த
சக்தி, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
அவருடன் பகவதி, மதுரவேல், மருதமலை ஆகியோரையும் அந்தத் தொண்டு நிறுவனம் பள்ளியில் சேர்ந்தது. தன்னைப்போல தனது சமூகமும் கல்வியறிவு பெறவேண்டும் என நினைத்தார் சக்தி.
விடுமுறை நாளில் ஊசிமணி விற்கச் செல்லும்போது, தங்கள் சமூகக் குழந்தைகளைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். அப்போது, “நீங்களும் பள்ளியில் படிச்சா, சமுதாயத்துல பெரிய ஆளா வரலாம். நான் உங்களை பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கிறேன்” என ஆர்வமூட்டியிருக்கிறார்.
அந்த மாணவர்களின் பெற்றோரிடமும் இதுகுறித்து பேசுவார். சக்தி மற்றும் அவரின் நண்பர்களின் முயற்சியால், சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து 25 சிறுவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். சக்தியின் இந்தச் செயலால், அவரின் சமூகத்தை சார்ந்த சிறுவர்கள் அதிகம் பேர் பள்ளிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள்.
நாடோடி சமூதாயச் சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் சிறுவன் சக்தியை ஊக்குவிக்கும் வகையில், 'ஹாண்ட் இன் ஹாண்ட்' நிறுவனம், ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
No comments:
Post a Comment