10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 18, 2015

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.
ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோரில் 5.40 லட்சம் பேர் மாணவர்கள், 5.32 லட்சம் பேர் மாணவிகள் ஆவர்.
தேர்வுப் பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இத் தேர்வுக்காக 5,200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட 33,816 மாணவ, மாணவிகள் நிகழாண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். தமிழ் வழியில் 7 லட்சத்து 30 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 50,429 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
241 சிறைவாசிகள்: மேலும், 241 சிறைவாசிகளும் இத்தேர்வை எழுதுகின்றனர். பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் 33 பேரும், கோவை மத்திய சிறையில் 97 பேரும், புழல் மத்தியச் சிறையில் 111 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வுடனேயே நிகழாண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படுகிறது.
ஆனால், இரண்டு வகுப்புகளுக்குமான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறாத வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் புத்தகத்தின் பக்கங்கள்: தமிழ், ஆங்கிலம், பிற மொழிப் பாடங்களுக்கு 22 பக்கங்கள் கொண்ட கோடிட்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் புத்தகங்கள் வழங்கப்படும். இதில், சமூக அறிவியல் பாடத்துக்கான விடைத்தாள் புத்தகத்தில் முதல் நான்கு பக்கங்களில் 4 வரைபடங்கள் இடம்பெற்றிருக்கும்.
9.15 மணிக்கே தொடங்கும்: பிளஸ் 2 தேர்வு வழக்கமாக காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், 10-ஆம் வகுப்புத் தேர்வு கடந்த ஆண்டு வழக்கமான நேரத்துக்குப் பதில் 45 நிமிஷங்கள் முன்னதாக
9.15 மணிக்குத் தொடங்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல, நிகழாண்டும் 10-ஆம் வகுப்புத் தேர்வு காலை 9.15 மணிக்குத் தொடங்குகிறது.
முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்ததாக 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். காலை 9.30 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.
சென்னையில் 57,000 பேர்: சென்னையில் 578 பள்ளிகளிலிருந்து 57,344 பேரும், புதுச்சேரியில் 291 பள்ளிகளிலிருந்து 19,559 பேரும் இத்தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு அட்டவணை
மார்ச் 19 வியாழக்கிழமை மொழிப்பாடம் முதல் தாள்
மார்ச் 24 செவ்வாய்க்கிழமை மொழிப்பாடம் இரண்டாம் தாள்
மார்ச் 25 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 26 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 30 திங்கள்கிழமை கணிதம்
ஏப்ரல் 6 திங்கள்கிழமை அறிவியல்
ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்

No comments:

Post a Comment