அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 20, 2015

அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி


தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்த கல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 5000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மட்டும் சுமார் 30 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் தங்களின் பள்ளிகளின் பெயர் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு கூடுதலாக சில பாடங்களை வைத்து அதை நடத்துகின்றனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக 10ம் வகுப்பு பாடங்களை 9ம் வகுப்பிலும், பிளஸ் 2 வகுப்பு பாடங்களை பிளஸ் 1 வகுப்பிலும் முன்கூட்டியே நடத்துகின்றனர். இதனால் பத்தாம் வகுப்பு பாடங்களையும், பிளஸ் 2 வகுப்பு பாடங்களையும் மாணவர்கள் 2 ஆண்டுகள் படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அந்த வகை பாடங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்யும்படியும் ஆகிறது. இது மாணவர்களின் மன நிலையை பாதிப்பதாக இருக்கிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அது குறித்து தனியார் பள்ளிகள் கண்டு கொள்வதே இல்லை. இதற்காக தனயார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமே பாடங்களை நடத்த தொடங்கிவிடுகின்றனர். இந்நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளிலும் அதே முறையை பின்பற்ற கல்வி அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். அதாவது கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் வரை காத்திராமல் மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்களை அரசுப் பள்ளிகளில் நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ஆண்டில் மேற்கண்ட இரண்டு வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை கிடையாது. மேலும், மேற்கண்ட வகுப்புகளின் ஆசிரியர்களையும் கோடை விடுமுறையில் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கவலை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment