தேர்வுமுறை விஷயத்தில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, March 18, 2015

தேர்வுமுறை விஷயத்தில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: ஒரு கல்வியாண்டில் எந்த தேர்வுமுறை அடிப்படையில் மாணவர்கள் சேர்கின்றனரோ, அதே முறையை கடைசிவரை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். இடையில் மாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது. மனுதாரரை புதிய முறையில் தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் எம்.டி.எஸ்., தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும், என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி அஞ்சனா எஸ்.நாயர் தாக்கல் செய்த மனு: குலசேகரம் அருகே படநிலம் ஸ்ரீமூகாம்பிகா பல் மருத்துவக் கல்லுாரியில் 2011 ல் முதுகலை எம்.டி.எஸ்., படிப்பில்
சேர்ந்தேன். அந்தநேரத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் அதில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறும் முறை இருந்தது. அதன்படி முதலாம் ஆண்டு தேர்வு எழுதினேன். இரண்டாம் ஆண்டில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒரு பருவத்தில் குறிப்பிட்ட பாடத்தில் தோல்வியடைந்தால் அனைத்துப் பாடங்களிலும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். நான் தோல்வியடைந்த பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். புதிய நடைமுறைப்படி நான் அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுத வேண்டும் என வற்புறுத்துகின்றனர். நான் கல்லுாரியில் சேர்ந்தபோது இருந்த நடைமுறைப்படி மீண்டும் தேர்வு எழுத வேண்டியதில்லை. நான் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைந்துள்ளேன். தேர்ச்சி சான்றிதழ் அளிக்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: ஒரு கல்வியாண்டில் எந்த தேர்வு முறை அடிப்படையில் மாணவர்கள் சேர்கின்றனரோ, அதே முறையை கடைசிவரை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். கல்வியாண்டின் இடையில் மாறுதல் செய்வதை அனுமதிக்க முடியாது. மாணவர்களை சிரமப்படுத்தக் கூடாது. மனுதாரரை புதிய முறையில் தேர்வு எழுத கட்டாயப்படுத்தக் கூடாது. மனுதாரர் 2014 ல் எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதனடிப்படையில் மனுதாரரை எம்.டி.எஸ்., தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றார். மனுதாரரின் வழக்கறிஞர் நிஷா பானு ஆஜரானார்.

No comments:

Post a Comment