பி.எட்., எம்.எட்., படிப்புகளை 2 ஆண்டு படிப்புகளாக மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரம்:
தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட பி.எட்., எம்.எட்., படிப்புகளை நடத்தும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்திடம் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதில், பி.எட்., எம்.எட்., படிப்புகள் ஓராண்டு என்ற முறை மாற்றப்பட்டு, இனி இரண்டு ஆண்டுகள் என்றும், ஒரு கல்லூரி 100 மாணவர்களைப் படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பழைய விதியை மாற்றி, 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விதிகளைப் பின்பற்றாத கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், எதிர்காலத்தில் புதிய அங்கீகாரமும் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வியியல் கல்லூரிகள் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உயர் கல்வித்துறைச் செயலர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை வரும் நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment