மதுராந்தகம் அருகே ஆசிரியர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்ததால் ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டுச் சென்றனர்.
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உள்பட்ட ஆலம்பரைகுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தண்டுமாரியம்மன் குப்பம், கடப்பாக்கம் குப்பம், ஊத்துக்காட்டான் குப்பம், விளம்பூர் குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 194 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 1950-இல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, கடந்த 2006-இல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, தலைமை ஆசிரியர் பாஸ்கர், 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு பணிபுரிந்த அறிவியல் ஆசிரியை ஜானகி, ஆங்கில ஆசிரியை சகாயராணி ஆகிய இருவரையும் பணியிடமாற்றம் செய்து கல்வித் துறை நிர்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தகவலறிந்த மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், ஆசிரியைகள் இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை மனு அளித்தனர். எனினும், பயன் இல்லாததால் குழந்தைகளை செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும், இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, கடப்பாக்கம் கிழக்குக் கடற்கரை சாலையில் மாணவர்களும், பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, புதன்கிழமையும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியைகள் ஜானகி, சகாயராணி ஆகியோர் படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, அதிக மதிப்பெண்களை பெற உதவி புரிந்தனர்.
இதனால், மேற்கண்ட இரு ஆசிரியைகளின் பணியிட மாற்றத்தைக் கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டோம்.
எனவே, இந்த விஷயத்தில் கல்வித் துறை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு இடமாற்றம் செய்யப்பட்ட இரு ஆசிரியைகளையும் இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து பணியாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிடில், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் இந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால், சூனாம்பேடு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment