திருப்பூர் குமரனுக்கு அரசு சார்பில் விழா முதல்வர் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 15, 2015

திருப்பூர் குமரனுக்கு அரசு சார்பில் விழா முதல்வர் அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு

பல ஆண்டு கோரிக்கையான, சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தில், நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியருக்கு, 1904ம் ஆண்டு அக்., 4ல், மகனாக பிறந்தவர், குமாரசாமி. கைத்தறி தொழிலில் ஈடுபட்டிருந்த குமாரசாமி, பிறகு திருப்பூரில் உள்ள மில்லில் பணிக்கு சேர்ந்தார். சட்ட மறுப்பு இயக்கத்துக்கு பிறகு, மீண்டும் அறப்போராட்டம் துவங்கிய போது, திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், தேசியக்கொடியை ஏந்தி, மறியலில் ஈடுபட்டனர். கடந்த, 1932ம் ஆண்டு ஜன., 10ல் நடந்த மறியல் போராட்டத்தின் போது, கச்சேரி ரோடு என்ற இடத்தில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, குமாரசாமியின் தலையில் அடிபட்டு, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தபோதும், தனது கையில் இருந்த தேசியக்

கொடியை கைவிடாமல், குமாரசாமி கெட்டியாக பிடித்துக் கொண்டே, "வந்தே மாதரம்' என்று முழங்கியபடி, மயங்கி சரிந்து விழுந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, தேசியக்கொடிக்கு மரியாதை செய்து இறந்ததால், "திருப்பூர் குமரன்' என்றும், "கொடிகாத்த குமரன்' என்றும் அழைக்கப்பட்டார். இவருடைய மனைவி, ராமாயி கடந்த 1998ம் ஆண்டில் இறந்தார்; ராமாயி விருப்பப்படியே, திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பூர் குமரன் நினைவாக, விடுதலை போராட்ட நூற்றாண்டு விழாவின் போது, ரயில்வே ஸ்டேஷன் அருகே, நினைவுத்தூண் அமைக்கப்பட்டு, 1957ம் ஆண்டு ஆக., 15ல் திறக்கப்பட்டது. கடந்த, 1991, ஏப்., 4ல், மார்பளவு சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது; குமரனை கவுரவிக்கும் வகையில், இந்திய அரசு, 2004ல் சிறப்பு தபால் தலையை வெளியிட்டது.

கோவை மாவட்டமாக இருந்த போதும், திருப்பூர் மாவட்டம் உருவான பிறகும், திருப்பூர் குமரன் சிலைக்கு, அரசு சார்பில் எந்த

மரியாதையும் செய்யப்படாமல் இருந்தது. மாவட்டம் உருவாகிய பிறகு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பராமரிப்பில் உள்ள சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திருப்பூர் குமரன் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்., 4ல், அமைச்சர்கள் முன்னிலையில், அரசு மரியாதையுடன் விழா கொண்டாடப்படுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் மாநில பொது செயலாளர் நடராஜன் கூறுகையில், ""திருப்பூருக்கு புகழ் சேர்த்த, சுதந்திர போராட்ட வீரர் குமரன் பிறந்தநாளான அக்., 4ல், அரசு விழாவாக கொண்டாடப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி சார்பில், இதை வரவேற்கிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment