அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்தி கட்டமைப்பு கட்டாயம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 16, 2015

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்தி கட்டமைப்பு கட்டாயம்!

தொகுப்பு மற்றும் பல மாடி கட்டடங்களில் சூரிய மின் சக்தி அமைப்பை கட்டாயமாக்க, சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன் மூலம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்தி கட்டமைப்பு கட்டாயம் என்ற நிலை உருவாகி உள்ளது.

சட்டசபையில் நேற்று, வீட்டு வசதித் துறை தொடர்பாக, 110வது விதியின் கீழ், முதல்வர்
ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:
துரித நகர வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தினால், தனி நபர் உபயோகப்படுத்தும் மின்சக்தி நுகர்வு அதிகமாகி வருகிறது. இதனால், மின்சக்தி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தேவைகளில், எவ்வித சமரசமும் செய்ய முடியாது.மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், மின்சக்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, அனைத்து தொகுப்பு வளர்ச்சிகள் மற்றும் பல மாடி கட்டடங்களில் சூரிய மின் சக்தியை பெறும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளில் உரிய திருத்தங்களை ஏற்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.இவ்வாறு முதல்வர் அறிவித்து உள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, பயன்படுத்தும் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்ற விதிமுறை, விரைவில் அமலுக்கு வருகிறது.நான்கு தளங்களுக்குக் குறைவான தனி கட்டடங்களுக்கு, இந்த விதிமுறை பொருந்தாது.

அடுக்குமாடி கட்டடங்கள் தகுதி என்ன?

* சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின், இரண்டாவது, 'மாஸ்டர் பிளான்'படி வகுக்கப்பட்ட வளர்ச்சி விதிகளின் அடிப்படையில், அடுக்குமாடி கட்டடங்களுக்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன
* தரை தளத்துடன், நான்கு தளங்களும் அதற்கு மேலும் கொண்ட கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள். தரை மட்டத்தில் இருந்து, 17 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டவையாக இவை இருக்கும். அதிகபட்ச உயரத்துக்கான கட்டுப்பாடு கிடையாது.
* தற்போதைய நிலவரப்படி, 12 முதல், 18 மீட்டர் அகல சாலைகளில், 13 ஆயிரம் சதுர அடியை குறைந்தபட்ச பரப்பாக கொண்ட மனைகளில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இந்த கட்டடங்களில் பரப்பளவு அடிப்படையில், 10 முதல், 100 வீடுகள் வரை கட்டப்படுகின்றன. வீட்டின் பரப்பளவு அடிப்படையில் எண்ணிக்கை மாறுபடுகிறது.

வழிமுறை என்ன; அரசின் மானியம் எவ்வளவு?

* கேள்வி: வீடுகளில் எவ்வளவு திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம்?

பதில்: ஒரு மாதத்திற்கு, 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டில், ஐந்து - ஆறு கிலோ வாட் திறன் கொண்ட, மின் நிலையம் அமைக்கலாம்.

* கேள்வி: சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்?

பதில்: ஒரு கி.வா., பேட்டரி வசதியுடன் கூடிய, மின் நிலையம் அமைக்க, 1.50 லட்சம் ரூபாய்; 'பேட்டரி' இல்லாமல் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்.

* கேள்வி: அரசு மானியம் வழங்குகிறதா?

பதில்: ஆம். தமிழக அரசு, ஒருகி.வா., மின் நிலையம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதில், மத்திய அரசு பங்கு, 30 ஆயிரம் ரூபாய். இதை பெற, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'டெடா' அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு, ஒரு கி.வா., அல்லது அதற்கு மேல் மின் நிலையம் அமைத்தால், தலா, ஒரு கிலோ வாட்டிற்கு, 20 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதை, சூரிய மின் சாதன தயாரிப்பாளர் மூலம் பெற்று கொள்ளலாம்.

* கேள்வி: பேட்டரியில் எவ்வளவு மின்சாரம் சேமிக்க முடியும்?

பதில்: பகல் நேரத்தில், மின்சாரம் பயன்படுத்தாமல் இருந்தால், 80 சதவீத மின்சாரத்தை, பேட்டரியில் சேமிக்கலாம். இதன் மூலம், மோட்டார் பம்ப் தவிர்த்து, விளக்கு, பேன், 'டிவி', 'ஏசி' போன்ற சாதனங்களை இயக்கலாம்.

* கேள்வி: சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு இடம் தேவை?

பதில்: ஒரு கிலோவாட் மின் நிலையத்திற்கு, 75 சதுர அடி இடம் தேவை.

* கேள்வி: சூரிய சக்தி மின் நிலையத்திற்கு என்ன உபகரணம் பயன்படுத்தப்படுகிறது?

பதில்: சூரிய மின் தகடு - பேனல், இன்வெர்டர், பேட்டரி ஆகியவை தேவை. பேட்டரி இல்லாத பட்சத்தில், 'நெட்' மீட்டர் பொருத்தி, சூரிய சக்தி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு வழங்கலாம்.

* கேள்வி: மின் வினியோகம் எப்படி?

பதில்: சூரிய மின் சக்தி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், பேட்டரிக்கு வந்து, 'இன்வெர்டர்' மூலம், மின் வினியோகம் செய்யப்படுகிறது.

* கேள்வி: சூரிய சக்தி மின் கட்டமைப்பு அருகில், வீட்டு உபயோக சாதனங்கள் இருக்கலாமா?

பதில்: இருக்கலாம். மின் தகடுகளை தொட்டாலும், 'ஷாக்' அடிக்காது.

* கேள்வி: சூரிய சக்தி கட்டமைப்பு அமைக்க, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டுமா?

பதில்: வீடுகளில்அமைக்க, யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. மின் வாரியத்திற்கு, மின்சாரத்தை விற்க விரும்பினால், 'நெட்' மீட்டர் பொருத்த, மின் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

* கேள்வி: சூரிய சக்தி மின் நிலையங்களில், மின் உற்பத்தி இல்லாத போது, எந்த மின்சாரத்தை பயன்படுத்தலாம்?

பதில்: பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம் அல்லது, மின் வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.

* கேள்வி: மழையின் போது, சூரிய ஔி இருப்பின், மின் உற்பத்தி நடக்குமா?
பதில்: நடக்காது.

* கேள்வி: வீட்டு மேற்கூரையில் உள்ள ஓடுகள் மேல், சூரிய மின் தகடுகளை நிறுவ முடியுமா?

பதில்: ஓடுகளின் எடையை பொறுத்து, சூரிய மின் தகடு நிறுவலாம்.

* கேள்வி: சூரிய மின் தகடுகளை, தரையில் பதிக்க முடியுமா?
பதில்: பதிக்க முடியாது.

* கேள்வி: தமிழகத்தில், எத்தனை நிறுவனங்கள், சூரிய சக்தி மின் சாதனங்களை விற்பனை செய்கின்றன?

பதில்: தமிழகத்தில், 600 நிறுவனங்கள், சூரிய மின் சக்தி சாதனங்களை விற்கின்றன. இதில், 10 - 15 பேர் மட்டும், அந்த சாதனங்களை உற்பத்தி செய்கின்றன. மற்றவர்கள், வெளி நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்து, சப்ளை செய்யும் டீலர்களாக உள்ளனர்.

* கேள்வி: எந்த நாடுகளில் இருந்து, சூரிய மின் சக்தி சாதனம் இறக்குமதி செய்யப்படுகிறது?

பதில்: சீனா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, தைவான் ஆகிய நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், சீனாவின் பங்கு, 70 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

வெப்பத்தை விடஔி தான் முக்கியம்!

கறுப்பு நிறத்தில் இருக்கும் சூரிய மின் பலகையில், குண்டூசி நுனி அளவில், பல்லாயிரம், 'சோலார் செல்'கள் அல்லது, 'போட்டோவோல்டிக் செல்'கள் உள்ளன. இந்த செல்கள் சூரிய ஒளிக் கதிரில் உள்ள ஒளித்துகள்களான, 'போட்டான்'களை ஈர்க்கின்றன. இந்த போட்டான்கள், சோலார் செல்களில் உள்ள அணுக்களை தாக்கும்போது, சிறு அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி பல்லாயிரம் செல்களைக் கொண்ட பெரிய சூரிய மின் பலகையிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை, ஒரு மின் கலனில் சேகரித்து, நமக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம். சூரிய ஒளி மின் பலகைகள் பல தரத்தில் விற்கப்படுகின்றன. உயர் தரமான சூரிய மின் பலகை, மிகச் சிறு அளவு வெளிச்சம் இருந்தாலும், அதற்கேற்ப சிறு அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதற்கு, வெப்பத்தை விட வெளிச்சம் தான் முக்கியம். சில சூரிய மின்பலகைகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட, மின்சாரத்தை சிறு அளவு உற்பத்தி செய்யுமளவுக்கு, 'சென்சிடிவ்' ஆனவை

No comments:

Post a Comment