பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தேர்வு நடத்தும் நிறுவனங்கள் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத் தாள்களின் நகலைப் பெறுவதற்கு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யக் கூடாது என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகியவை இந்த உத்தரவின் நகல்களை அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஆப்னே இன்கிடி என்பவர் தனது ஐந்து விடைத்தாள்களின் நகல்களை, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டு மனு அளித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 750 வீதம் ரூ. 3750 கட்டுமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மத்திய தகவல் ஆணையத்தில் மேல் முறையிடு செய்தார்.இவரது மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யாலு, தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தில்லி பல்கலைக்கழகம் தகவல்களை பெறுவதற்கு மாணவர்களின் பொருளாதார அடிப்படையில் இரு பிரிவுகளை உருவாக்கியிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இது அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.மேலும், தில்லி பல்கலைக்கழக தகவல் உரிமை சட்ட விதிமுறைகளின்படி மாணவர்களின் விடைத்தாள்கள் ரகசிய காப்புப் பிரிவின் கீழ் வரவில்லை என்றும் கூறினார்.தில்லிப் பல்கலைக்கழகம் தன்னாட்சி மற்றும் தகுதிவாய்ந்த அமைப்பாக இருந்து தனக்குரிய விதிமுறைகளை தானே வகுத்துக் கொண்டாலும், தகவல்களை பெறும் வகையில் பாராளுமன்றம் தகவல் உரிமைச் சட்டத்துக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிக்க முடியாது. தில்லிப் பல்கலைக்கழகம் அல்லது வேறு எந்த பல்கலைக்கழகம் மற்றும் எந்த பொது நிறுவனங்களும் தகவல் உரிமைச் சட்டத்தை மீற முடியாது.மேலும் விடைத் தாள் நகல்களை பெறுவதற்கு, தேர்வு முடிவு வெளியான 61 நாள்களுக்குப் பின்பும் மற்றும் 75 நாள்களுக்கு முன்பும் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதியும் முரணாக உள்ளது.தில்லி போன்ற பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து, மாணவர்களின் விடைத் தாள்களுக்கு ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூலிக்க கூடாது என்றார் ஆச்சார்யாலு.இதுவிஷயத்தில் தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் சம்பந்தப்பட்ட மாணவருக்கு தகுந்த நிவாரணம் வழங்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.மேலும், இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும், நிகர்நிலைப் பல்கலைகழகங்களும், தேர்வு நடத்தும் அமைப்புகளும் மாணவர்களின் விடைத் தாள்களைப் பெறுவதற்கு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் நகல்களை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகியவை அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்து விளம்பரம் செய்வதோடு உரிய நடவடிக்கை எடுக்கவும் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Monday, January 18, 2016
New
விடைத் தாள் நகல்: பக்கத்துக்கு ரூ. 2க்கு மேல் வசூலிக்க தகவல் ஆணையம் தடை.?
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment