நடந்து செல்பவனுக்கு சைக்கிள் மீது ஆசை! சைக்கிளில் செல்பவனுக்கு டூவீலர் மீது ஆசை! டூவீலரில் செல்பவனுக்கு கார் மீது ஆசை! காரில் செல்பவனுக்கு புதிது புதிதாக கார்களை வாங்கி வலம்வர ஆசை!இப்படி ஒவ்வொருவருடைய ஆசையும் இறக்கை கட்டி பறக்கிறது. வசதி வரும் போது தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. பொருளாதார வளர்ச்சி வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கிறது. தங்கள் ஆசைகளை–தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி ஒவ்வொருவரும் பயணிக்கிறார்கள். முன்பு போக்குவரத்துக்கு பஸ்களையே அதிக அளவில் பயன்படுத்தினார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள் ஆட்டோக்களில் செல்வார்கள். ஆனால் இப்போது சாதாரண, நடுத்தர வர்க்கத்தினரும் இடிபட்டு, மிதிபட்டு, நெரிசலில் சிக்கி விழி பிதுங்கி பஸ்சில் பயணம் செய்வதைவிட ஆட்டோ பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் சென்னை போன்ற நகரங்களில் டூவீலர், கார்களுக்கு இணையாக ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது. இதை வளர்ச்சியின் பிரமிப்பாக பார்த்தாலும் இதன் பின்னணியில் சுற்றுச்சூழலை கெடுத்து மக்கள் வாழவே தகுதியற்ற இடமாக நகரங்களை மாற்றி விடும் ஆபத்து மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் காற்று மாசுபட்டு பல நகரங்கள் திண்டாடுகின்றன. டெல்லியில் ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப்பதிவெண் கொண்ட வாகனங்களும், இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை பதிவெண் வாகனங்களும் இயக்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் புதிய முயற்சியை அந்த மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் இனிமேல் அந்த மாநிலத்தில் புதிதாக டீசல் வாகனங்கள் பதிவு செய்யப்படமாட்டாது என்ற திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வளவு வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் உண்மையான சந்தோஷமும், அமைதியும் பறிபோய் விட்டதாகவே மக்கள் நினைக்கிறார்கள். பெசன்ட் நகரில் முக்கிய சாலையில் மாதம் ஒருநாள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மக்கள் உற்சாகமாக நடக்கிறார்கள். வாகன புகையை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் கடந்த 2010–ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படுவதில்லை. சென்னையைப் போல் மற்ற நகரங்களிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட வாகனங்களின் நச்சுப்புகை காற்றில் கலந்து வருகிறது. எனவே அனைத்து நகரங்களிலும் பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க பரிசீலித்து வருவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளது. முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் ஆட்டோக்களுக்கு தடை விதித்து எல்.பி.ஜி ஆட்டோக்களுக்கு மட்டும் பெர்மிட் வழங்குவது குறித்து தமிழக அரசு 4 வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இது தக்க நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய சரியான நடவடிக்கையே! ஆனால் ஆட்டோக்களின் புகையை மட்டும் கட்டுப்படுத்தினால் காற்று மாசுபடுவதை தடுத்து விட முடியுமா? இதே போல் கார்களுக்கும் பயோ கியாஸ் பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வரலாம். இதுபற்றி மக்களிடமும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இயற்கை பேரழிவில் இருந்து மக்களை காப்பது போல் இயற்கையை அழித்து நம் உயிருக்கு நாமே உலை வைத்துக் கொள்ளும் நிகழ்வுதான் காற்றை மாசு படசெய்தல். இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. காற்றை தூய்மையாக்கி நல்ல காற்றை சுவாசிக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும்.
Friday, January 22, 2016
New
நன்றே செய்வோம்; அதை, இன்றே செய்வோம் - தலையங்கம்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment