சட்டமன்ற தேர்தலில் 11 வகையான ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம் என்று புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.
புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புகைப்பட அடையாள அட்டை
வாக்காளர் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் நோக்கத்திலும் அதன் மூலம் உண்மையான வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தவும், தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பயன் படுத்த பல பயனுள்ள வழிமுறைகள் செய்யப்படலாம். இதற்காக அரசு செலவில் தேர்தல் ஆணையம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை வாக்காளர்களுக்கு அளித்துள்ளது.
எனவே வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும்போது தங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்கவேண்டும். இவ்வாறு காண்பிக்க தவறுதல் அல்லது மறுத்தல் அவர்கள் வாக்களிப்பதை மறுக்கும் நிலைக்கு இட்டு செல்லும். ஆகையால் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதும் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதும் அவசியம். தேர்தல் ஆணையம் ஒரு கால வரையறையை நிர்ணயித்து அதற்குள் வாக்காளர் அடையாள அட்டையை வழங்க ஏற்பாடு செய்தது.
வாக்காளர் சீட்டு
இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்திருந்த அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இத்துடன் கூட தற்போதைய பொதுத்தேர்தலுக்கு வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் சீட்டு அளிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது தேர்தல் ஆணையம் பல காரணங்கள், சட்டப்பூர்வமான மற்றும் உண்மையான நிலைகள் இவற்றை கருத்தில் கொண்டு தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடியில் காண்பிக்கவேண்டும் என்றும் அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மாற்றாக புகைப்படம் உள்ள கீழ்க்கண்ட ஆவணங்களில் ஒன்றை தங்களின் அடையாளத்தை நிரூபிக்க பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.
11 ஆவணங்கள்
இதன்படி 1.பாஸ்போர்ட், 2.டிரைவிங் லைசென்சு, 3.மத்திய-மாநில, அரசுசார்பு பொதுநிறுவனங்கள், பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள், 4.வங்கி, அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள், 5.பான்கார்டு, 6.ஸ்மார்ட் கார்டு, 7.தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை, 8.தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, 9.புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், 10.தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்குச்சீட்டு, 11.பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகளை காட்டி வாக்களிக்கலாம்.
வாக்காளரின் அடையாளம், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மூலம் நிறுவப்பட்டால் அதிலுள்ள எழுத்து பிழைகள் போன்றவை புறக்கணிக்கப்படலாம். மேலும் மற்றொரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட வாக்காளர் அட்டை காண்பிக்கப்பட்டால் அவ்வாக்காளர் வாக்களிக்க வரும்போது வாக்குச்சாவடிக்கு தொடர்புடைய வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இருக்கும்பட்சத்தில் அவ்வகையான புகைப்பட வாக்காளர் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். புகைப்பட ஒற்றுமையில்லாத சூழலில் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க இயலாவிட்டால் மேற்கண்ட மாற்று ஆவணங்களில் ஒன்றை வாக்காளர் காண்பிக்கவேண்டும்.
பாஸ்போர்ட்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பாஸ்போர்ட் அடிப்படையில் வாக்காளராக பதிவு செய்துள்ள வெளிநாடு வாழ் வாக்காளர்கள் தங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே அடையாளம் காணப்படுவர். வேறு எந்தவித அடையாள ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment