பட்டதாரி ஆசிரியர்களை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்க, பள்ளிக் கல்வித்துறை விதித்த நிபந்தனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ’பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது’ என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியை வளர்மதி தாக்கல் செய்த மனு: பள்ளிக் கல்வித்துறை, 2016 ஜூலையில், ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது; அதில், ’பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை உதவி ஆசிரியர்களாக நியமிப்பதற்கு பரிசீலிக்கப்படுவர்; முதுநிலை உதவி ஆசிரியர் பணியில், ஐந்து ஆண்டுகள் முடித்த பின், மீண்டும் பட்டதாரி ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினால் தான், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வர முடியும்’ என, கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, சட்ட விரோதமானது; இதை, ரத்து செய்ய வேண்டும். முதுநிலை உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சிறப்பு விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இரண்டு வழிகளில் பதவி உயர்வு உள்ளது; ஒன்று, முதுநிலை உதவி ஆசிரியராக வருவது; மற்றொன்று, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வருவது.
எனவே, முதுநிலை உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், தலைமை ஆசிரியர் பதவியை பெற மீண்டும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற, நிபந்தனை விதிப்பது சரியல்ல; இதை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி பி.ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். மனுவுக்கு, இரண்டு வாரங்களில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்கவும், பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு நடவடிக்கைகள், இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment