இந்தியாவில் எல்லா அஞ்சலகங்களுக்கும் ஒவ்வொரு பின்கோடு நம்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அஞ்சலகத்திற்கு கொடுத்த எண் வேறொரு அஞ்சலகத்திற்கு வழங்கப்படவில்லை. அதனால் கடிதத்தில் பின்கோடு எண்ணைச் சரியாக எழுதும் பட்சத்தில்,அதை எந்த அஞ்சலகத்திற்கு அனுப்ப வேண்டுமென்று சரியாகத் தெரிந்துகொள்ள முடியும்.
"போஸ்ட் இன்டெக்ஸ் நம்பர்' என்பதன் சுருக்கம்தான் "பின்' (pin)..
பின் கோடில் ஆறு எண்கள் இருக்கும். அதில் முதலாவது எழுத்து மண்டலத்தைக் குறிக்கிறது. இந்தியாவில் எந்த மண்டலத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்படவேண்டும் என்பது இதிலிருந்து தெரியும். இந்தியாவை எட்டு மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.
உ தாரணமாக, தமிழ்நாடு-கேரளம்-லட்சத்தீவு ஆகிய பிரதேசங்கள் அடங்குகிற மண்டலத்தின் எண் 6 ஆகும். இந்த எண்தான் இடது மூலையில் வரும். அதுபோன்று ஜம்மு,பஞ்சாப் பகுதிகளுக்கு "1' என்பதுதான் மண்டல எண். அதனால் அங்குள்ள அஞ்சலகங்களின் பின்கோடு 1-ல் தொடங்கும். தில்லியும் இந்த மண்டலத்தில் உட்பட்டதுதான்.
பின் கோடின் முதல் மூன்றெழுத்தைக் கொண்டு கடிதத்தை இனம் பிரிக்கின்ற (sorting)மையத்தைத் தெரிந்துக் கொள்ளலாம். மிச்சமிருக்கும் கடைசி மூன்றெழுத்தைக் கொண்டு எந்த அஞ்சலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதைச் சரியாக அறிந்துகொள்ளலாம்.
சுருக்கமாக, மிகவும் அறிவியல் முறையில் ஒரு அஞ்சலகத்தைத் தெரிந்துக் கொள்ள பயன்படுத்துகிற எண்தான் பின்கோடு. அது, ஒரு கடிதத்தை சரியான அஞ்சலகத்தில் சேர்க்க பெரிதும் உதவுகிறது. அந்த அஞ்சலகத்திலிருந்து அது, குறிப்பிட்ட முகவரியை அடைந்துவிடுகிறது. பின்கோடைத் தவிர மிச்சமிருக்கும் முகவரியை எந்த மொழியில் எழுதினாலும் பிரச்னையில்லை.
உதாரணமாக, தில்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்ற கடிதத்தில் தமிழிலேயே முகவரி எழுதலாம். ஆனால் பின்கோடு சரியாக இருக்க வேண்டும். அந்தக் கடிதம் தமிழ்நாட்டு அஞ்சல் பிரிப்பகத்தை அடைந்துவிட்டால் அவர்கள் அதை சரியான முகவரியில் சேர்த்துவிடுவார்கள்.
No comments:
Post a Comment