தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையின்றி நடைபெறுகிறது. தகுதியே இல்லாத மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைக்கூறி, தேசிய தகுதி
மற்றும் நுழைவுத் தேர்வை (நெட்) மத்திய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன.
இந்நிலையில், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தும் பொறுப்பை தனியார் கல்வி நிறுவனங்களிடம் ஒப்படைத்ததன்மூலம், அந்த நிறுவனங்களே லாபம் அடையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வை தேசியளவில் நடத்தித் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் பொறுப்பை தனியார் கல்வி நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கடந்த காலங்களில் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் எப்படி மருத்துவ இடங்களை விலைபேசி விற்பனை செய்தனவோ, அதேபோல்தான் இம்முறையும் மருத்துவ இடங்களை தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விலைபேசி விற்பனை செய்யப்போகின்றன.
ஏனெனில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 51 ஆயிரம் மாணவர்களை மட்டுமே சேர்க்கமுடியும். ஆனால், நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் 4.09 லட்சம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, ஒரு மருத்துவ இடத்துக்கு 8 பேர் போட்டி போடுகின்றனர். தனியார் கல்லூரிகள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 100 இடங்களுக்கு 800 பேர் போட்டியிட்டால், அவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களின் விண்ணப்பங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் விண்ணப்பங்களை ஏதோ ஒரு காரணம்கூறி கல்லூரி நிர்வாகம் நிராகரிக்கும் ஆபத்து உள்ளது. மாணவர் சேர்க்கையில் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பு இல்லாதபட்சத்தில் அனைத்துவிதமான முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டுவிடும். எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசுகளே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய சுகாதாரத்துறை ஆணையிட வேண்டும்.
தேசிய நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ) அதன் பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இருந்து 3% மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில், தமிழக அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை சி.பி.எஸ்.இ. மாணவர்களே கைப்பற்றிக்கொள்ளும் நிலை ஏற்படும். மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகிவிடும். ஐ.ஐ.டி. படிப்பு எப்படி மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு எட்டிப்பிடிக்க முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்டதோ அதேபோல், மருத்துவப் படிப்புகளும் ஆகிவிடும். இது எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையும். உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி காரணமாக அது சாத்தியமாகவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வருவது, நுழைவுத் தேர்விலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவது, மாநில பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக வலுப்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும். இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சித் தலைவர்கள், சமூக நீதியில் அக்கறையுள்ள கல்வியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment