பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை, மே 21ம் தேதி முதல், 10 நாட்களுக்கு நடத்த, போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 22 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும், பள்ளிகள் திறப்பதற்கு முன், கோடை விடுமுறையில், பள்ளி வாகன ஆய்வை, போக்குவரத்து துறை துவக்கி விடுவர். ஆய்வில், தகுதி சான்றிதழ் பெறும் வாகனங்களை மட்டுமே இயக்க அனுமதிப்பர்.
கடந்த ஆண்டு ஆய்வுக்கு வராத, 2,000 பள்ளி வாகனங்களை இயக்க முடியவில்லை. இதனால், மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், இந்த ஆண்டு கோடை விடுமுறைக்குள் வாகன ஆய்வை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும், மே, 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை, 10 நாட்களுக்கு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கும். தமிழகத்தில் உள்ள 79 ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் ஆய்வு பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும், இதுகுறித்த தகவல் அனுப்பப்படும். பாதுகாப்பு குறைபாடு உள்ள வாகனங்களில், தேவையான மாற்றங்களை செய்து, மீண்டும் தகுதி சான்றிதழ் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment