இமய மலைப் பகுதியில் நிலநடுக்கம் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது: தொடர்ந்து ஏற்படலாம் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 28, 2015

இமய மலைப் பகுதியில் நிலநடுக்கம் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது: தொடர்ந்து ஏற்படலாம் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்கள்

இமய மலைப் பகுதிகளில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். தற்போது நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதைப் பார்க்கும் போது, அந்த ஆய்வில் கூறப்பட்ட தகவல்கள் துல்லியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

நேபாளத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவானது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, திபெத் போன்ற இடங்களிலும் உணரப்பட்டது. இந்தியாவின் உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூர், சென்னை உட்பட சில தென் மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தில் இமாலயப் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதால் கட்டிடங்கள், புராதன சின்னங்கள் தரைமட்டமாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இந்நிலையில், இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பூமிக்கடியில் உள்ள ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ என்றழைக்கப்படும் கண்டத் தட்டு கள் நகர்வதாலும், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதாலும் நிலநடுக் கம் ஏற்படுகிறது. இந்தியா - யுரேசியா கண்டத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வ தற்கு காரணமாகும் ஒரு முக்கிய ‘ஃபால்ட்’ நேபாளத்தில் இருக் கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படு வதற்கான சாத்திய கூறுகள் இருப்ப தாக கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு, ‘சென்டர் பார் மேத்தமெட்டிக்கல் மாடலிங் அண்ட் கம்ப்யூட்டர் சிமுலேஷன்’ என்ற ஆராய்ச்சி மையத்தின், நிலநடுக்கவியல் ஆய்வாளர் வினோத் குமார் கவுர் என்பவர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘இந்த ஃபால்ட்டில் அதிகமான ஆற்றல் சேர்ந்துள்ளதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. 8 புள்ளி அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் பதிவாவதற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது.
ஆனால் நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று துல்லியமாகக் கூற முடியாது. நாளையே இது ஏற்படும் என்று கூற முடியாது, ஆனால் இந்த நூற்றாண்டில் ஏற்படும். அல்லது மேலும் சில காலம் காத்திருந்து மிகப்பெரிய அளவில் நிலநடுக்கத்தை வெளிப்படுத்தலாம்’’ என்று அப்போதே கூறியிருந்தார்.
அதற்கு ஓராண்டு முன்பே, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பரில், ‘நேச்சர் ஜியோ சயின்ஸ்’ இதழில் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான தகவலில் மத்திய இமய மலைப் பகுதிகளில் 8 முதல் 8.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான பூமி வெடிப்புகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இமய மலைப் பகுதிகளில் உணர முடியாத நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இமய மலைப் பகுதிகள் கடினமான பாறைகளை கொண்டிருப்பதாலும், வளைந்து வளைந்து மலைகள் இருப்பதாலும், பல நேரங்களில் வெளி உலகம் அறியாத, அறிய முடியாத பல நில நடுக்கங்கள் நிகழ்வதுண்டு. இந்த நிலநடுக்கங்கள் எந்த கருவியிலும் பதிவாவதில்லை. மேலும், இமய மலையின் பூமிக்குள் ஏற்படும் நிலநடுக்கங்களால் பூமி பிளவுபடுவதும் இல்லை. இதை ‘பிளைண்ட் த்ரஸ்ட்’ என்கின்றனர்.
ஆனால், உயர் தொழில்நுட்ப உத்திகள் கொண்ட ஆய்வில், 1255 மற்றும் 1934-ம் ஆண்டுகளில் இமாலயத்தில் இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் பூமியின் மேற்பகுதியில் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
1934-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பூமியில் சுமார் 150 கி.மீ. தூரம் பிளவு ஏற்பட்டது. பூமி பிளவுப்படும் வகையில் ஏற்படும் நிலநடுக்கத்தை ‘மெயின் பிரான்ட்டல் த்ரஸ்ட்’ என்றழைக்கின்றனர். இதுபோன்ற நிலநடுக்கங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து நிகழலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இமாலயப் பகுதிகளில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டது போல், இப்போது நேபாளத்தில் நிகழ்ந்ததா என்று ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment