பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற உள்ளன.
கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிகப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
ஆன்-லைனில் பதிவிறக்கம்:
கலந்தாய்வு விண்ணப்பங்களை www.annauniv.edutnea என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். கலந்தாய்வு தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் பின்னர் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment