தொண்டு செய்வதே சங்கர் கடமையாகும்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 21, 2016

தொண்டு செய்வதே சங்கர் கடமையாகும்...


இழுத்துப்போட்டு இப்போதெல்லாம் சொந்த வேலையைச் செய்யக்கூட ஆள் இல்லை, கல்யாண வீட்டு வாசலில் கூட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முகம் தெரியாத பெண்கள்தான் வணக்கம் போட்டு வரவேற்பு தருகிறார்கள்,இலையில் அமர்ந்ததும் செயற்கையைாக சிரித்து சோறு போடுவதும் அவர்களே.
இந்த நிலையில் ஒருவர், முன்பின் தெரியாத எந்த விழா என்றாலும் தானே வலியப்போய் இழுத்துப்போட்டு எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஒரு சேவையாக செய்து வருகிறார்.

அவர்தான் ராஜபாளையம் சங்கர் கணேஷ்

பரிசுப்பொருள் வியாபாரம் செய்யும் இவருக்கு நகைக்கடை பஜாரில் நண்பர்கள் அதிகம்.அவர்கள் அவசரமாக கடையைவிட்டு போகவேண்டும் என்றால் உடனே தேடுவது சங்கரைத்தான்.கடையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம் மில்லியளவு தங்கத்துாள் கூட கடையைவிட்டு வௌியே போகாது.



இப்படி நம்பிக்கை நாயகனாக இருந்த இவர் தொண்டராக மாறியது ஒரு மருத்துவமுகாமில்தான்.முகாமில் குவிந்த பொதுமக்களை ஒழுங்குபடுத்த முடியாமல் முகாமில் உள்ளவர்கள் தவித்தனர், முறையாக சிகிச்சை தரமுடியாமல் மருத்துவர்களும் நெளிந்தனர்.
இதைப்பார்த்த சங்கர் களத்தில் இறங்கினார்.' நமக்காக மருத்துவ சேவை செய்ய வந்திருக்காங்க இப்படி சத்தம் போட்டா எப்படி?; எல்லோரும் வரிசைக்கு வாங்க, குழந்தைங்க பெரியவங்க பெண்கள் எல்லாம் முன்னாடி போங்க, மற்றவர்கள் எல்லாம் பொறுமையா வாங்க, எல்லோரையும் பார்த்துவிட்டுத்தான் டாக்டருங்க போவாங்க' என்று சொல்லி ஒடி ஒடி உழைக்க முகாம் ஒரு ஓழுங்குக்கு வந்தது.முகாம் நடத்தியவர்கள் பங்கு பெற்றவர்கள் பயன்பெற்றவர்கள் என்று எல்லோருமே பாராட்டினர்.

ஒரு நல்ல காரியம் செஞ்சா இவ்ளோ பேர் பாராட்டுறாங்களே? மனுஷனா பிறந்ததே நாலு பேருக்கு நல்லது செய்யத்தானே, நாம இப்படி செலவு இல்லாம பல நல்லது செய்யலாமே என எண்ணி அன்று களம் இறங்கியவர்தான் இன்று வரை களைப்படையவே இல்லை.
கோவில் விழா,விளையாட்டுப்போட்டிகள்,தனியார்,அரசு மற்றும் பொது விழாக்கள் என்று எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் இவராகவே ஆஜராகிவிடுவார்.அங்குள்ள பொறுப்பாளர்களிடம் சென்று இவரே தன்னை அறிமுகம் செய்துகொண்டு சேர் எடுத்துப்போடறதில் இருந்து சாப்பாடு பரிமாறுவது எந்த வேலை என்றாலும் சொல்லுங்கள் செய்கிறேன் பைசா காசு வேண்டாம் என் மனத்திருப்திக்காக செய்கிறேன் என்பார்.உலகத்தில் இப்படி ஒரு மனுஷனா என்று சந்தேகத்துடன் ஆரம்பத்தில் பார்த்தவர்கள் கூட இப்போதெல்லாம் எந்த விழா என்றாலும் 'முதல்ல சங்கருக்கு தகவல் சொல்லிடுங்கப்பா' என்கின்றனர்.

இவரது தன்னார்வத்தொண்டு தற்போது எல்லையே இல்லாமல் பரவி வருகிறது.குற்றாலம் விவேகானந்த ஆஸ்ரம விழாவில் முதல் அழைப்பே சங்கருக்குதான்.ஒரு முறை கபடி போட்டிக்கு பரிசளிக்க வந்த விருந்தினர் சங்கரின் சேவையைப் பார்த்துவிட்டு என்னைவிட வீரர்களுக்கு பரிசு வழங்க பொருத்தமானவர் சங்கர்தான்,காரணம் அவர்தான் இந்த போட்டி சிறப்பாக நடைபெற எல்லோரையும் விட உழைத்தவர் என்று சொல்லி சங்கர் கையாலேயே வீரர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கசெய்தார்.

கடந்த வாரம் மதுரையில் ஒரு விழாவில் சங்கரை கூப்பிட்டு பணமுடிப்பு வழங்கி பாராட்டி கவுரவிப்பதாக சொல்லி அழைத்தனர், ஆனால் அதே நேரம் பரமக்குடியில் ஒரு ஏழை விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்கும் சேவை செய்து கொண்டிருந்தார். மற்றவர்களாக இருந்தால் அப்படியே விட்டுவிட்டு பணமுடிப்பை பெற ஒடிப்போய் இருப்பார்கள் ஆனால் அவர் எவ்வளவு பணமுடிப்பு என்று கூட கேட்காமல், 'மாணவர்களுக்கு சாப்பாடு போட என்னைவிட்டால் ஆள் இல்லை ஆகவே உங்கள் அழைப்பிற்கு நன்றி விழாவிற்கு வரஇயலவில்லை மன்னிக்கவும்' என்று சொன்னவர்.

விழாக்கள் இல்லாத நேரத்தில் ஆதார் அட்டை விழிப்புணர்வு,அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்,டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றிய வாசகத்தை தனது சைக்கிளில் எழுதிக்கொண்டு ஊருக்குள் வலம்வருவார்.
தற்போது மரம் நடுவதில் ஆர்வம் செலுத்திவரும் சங்கர் இதற்காக பள்ளி கல்லுாரி மாணவர்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.வெறும் பிரச்சாரத்தோடு நிற்காமல் தனக்கு கிடைக்கும் மரக்கன்றுகளை தெரு ஒரங்களில் நட்டு வளர்த்து பராமரித்து வருகிறார்.

உடம்புலேயும் மனசுலேயும் நிறைய தெம்பு இருக்கு சார் எனக்கு நீங்க எதுவும் தரவேண்டாம் பொதுமக்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்க சார் என்று அன்பாக கேட்கும் சங்கரை வாழ்த்தவோ, வாய்ப்பு தரவோ அழைக்கவேண்டிய எண்:9442479611.
-எல்.முருகராஜ்

No comments:

Post a Comment