இரண்டாவது மாதமாக தொடரும் அவலம் : சம்பள பணத்தை எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 3, 2017

இரண்டாவது மாதமாக தொடரும் அவலம் : சம்பள பணத்தை எடுக்க முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி


சென்னை: அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடந்த மாதம் போன்று நேற்றும் ₹10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதால் மிகவும் அவதிப்பட்டனர்.  பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி முதல் ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதை மாற்றுவதற்கான காலக்கெடு டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னரும் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. இதனால் கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்கள் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 


 அரசு ஊழியர்களுக்கு வங்கிகளில் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி சம்பள பணத்தில் இருந்து ₹10,000 மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்து வாங்கி சென்றனர். இந்நிலையில் டிசம்பர் மாதம் சம்பளம் ஊழியர்களின் வங்கி கணக்குகளில் நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் புத்தாண்டு என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்தது. நேற்று தலைமை செயலகம் மற்றும் எழிலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு பணிக்கு வந்தனர். இருக்கையில் அமர்ந்து பணியை செய்யாமல் நேராக வங்கிகளுக்கு சம்பள பணத்தை எடுக்க சென்றனர்.
 தலைமை செயலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் உள்ளது. இங்கு காலை 9.30 மணி முதல் நீண்ட வரிசையில் அரசு ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் போன்று ரூ.10,000 மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பள பணத்தை வழங்க முடியாது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் இதேநிலைதான் நீடிக்கும். இதனால் அரசு பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் மட்டும் 5 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இவை அனைத்தும் செயல்படவில்லை. கடந்த 50 நாட்களாக மூடியே கிடக்கிறது. இதனால் ஊழியர்கள் வங்கிகளிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் எடுக்க முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
 ஒரு நாளைக்கு ரூ,4500 வரை ஏடிஎம்களில் எடுக்கலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் ஏடிஎம் மையங்கள்  எதுவும் செயல்படாததால் மோடியின் அறிவிப்பு வெறும் வெற்று அறிவிப்பாகவே உள்ளது என்று அரசு ஊழியர்கள் புலம்பினர். இதே நிைலமை தான் தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. தலைமை செயலகத்தில் மட்டும் 5000 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனியார் நிறுவன ஊழியர்களும் நேற்று வங்கிகளில் சம்பள பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.  வங்கிகளில் இருந்து வாரம் ₹24 ஆயிரம் பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வங்கிகளில் இவ்வளவு பணம் தரப்படுவதில்லை.

No comments:

Post a Comment