ஆய்வு செய்யப்படாத 2,000 பள்ளி வாகனங்கள்: உஷார் அடையுமா போக்குவரத்து துறை? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 1, 2015

ஆய்வு செய்யப்படாத 2,000 பள்ளி வாகனங்கள்: உஷார் அடையுமா போக்குவரத்து துறை?

   கடந்த ஆண்டு, பள்ளி வாகன ஆய்வில், 2,000 வாகனங்களின் ஆய்வை முடிக்க முடியாமல் போனது. இந்த ஆண்டு, கோடை விடுமுறையில், பள்ளி வாகனங்களின் ஆய்வை முடிக்க, போக்குவரத்து துறை திட்டமிட வேண்டும். 
          தமிழகத்தில், 20 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. இவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை, மாவட்ட வாரியாக, கடந்த ஆண்டு, மே மாதம், 7ம் தேதி துவக்கினர். வாகன படிக்கட்டு, அவசர கால கதவு, டயர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜூனில், பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், 25 சதவீத பள்ளி வாகனங்களில், ஆய்வு முடிக்கப்படவில்லை. அப்பணியை, பள்ளிகள்திறக்கப்பட்டும் அதிகாரிகள் தொடர்ந்தனர். முதல் கட்டமாக, தகுதிச் சான்றிதழ் மறுக்கப்பட்ட, 1,279 வாகனங்களில், பாதுகாப்பு அம்சங்கள் சரி செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் இயக்க அனுமதித்தனர். இருந்தும், 2,000 வாகனங்கள் ஆய்வுக்கே வரவில்லை. அந்த வாகனங்கள் குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். இதன் பிறகு, எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த சூழ்நிலையில், விரைவில் கோடை விடுமுறை வருகிறது. இந்த காலகட்டத்தில், போதிய கண்காணிப்பு குழுக்களை அமைத்து, அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே, போக்குவரத்து துறை திட்டமிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment