பள்ளி மாணவர்களுக்கு இடையே ஆங்கில மொழித் திறன், சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், குறுக்கெழுத்துப் போட்டியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்
றறிக்கை விவரம்:
மாணவர்களுக்கான இந்த 60 நிமிஷ குறுக்கெழுத்துப் போட்டி நகரங்கள் அளவில், தேசிய அளவில் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதலில் நகரங்களுக்கு இடையேயான போட்டி ஜூன் 26-ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடத்தப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதியும், கோவையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதியும் நடத்தப்படும். விருப்பமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். பள்ளிக்கு தலா 2 மாணவர்கள் வீதம் அனுப்ப வேண்டும். இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்குச் சான்றிதழும், பரிசுப் பொருளும் வழங்கப்படும்.
அடுத்ததாக தேசிய அளவிலான போட்டி தில்லியில் இரண்டு தினங்கள் நடத்தப்படும். இதில் காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று, இறுதிச் சுற்று என மூன்று நிலைகளாக போட்டிகள் நடத்தப்படும். காலிறுதிச் சுற்றிலிருந்து 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டு அரையிறுதிச் சுற்றுக்கு அனுப்பப்படும். அங்கு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். முதலிடம் பெறும் இரண்டு மாணவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவர்.
இதில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசும், இரண்டாமிடம் பெறுபவருக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசும், மூன்றாமிடம், நான்காமிடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். அதனுடன் கேடயம், சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment