கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே மாணவர் சேர்க்கை... பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவர்களை ஈர்க்கும் வகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இம்முறை முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு கல்லூரி முதல்வர்கள் கூறியது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலைசிறந்த பேராசிரியர்கள் பலர் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே ஆரம்பித்துவிடுவதால், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும், படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர்களும் பிரபல தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர். இந்த நிலை காரணமாக அரசு கல்லூரிகளில் உள்ள முழுமையான திறன், வெளிப்படாமலே போய்விடுகிறது.
இந்த நிலையை மாற்றும் வகையில், தனியார் கல்லூரிகளைப் போல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்த இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், திங்கள்கிழமை விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு, மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என்றனர்.
விண்ணப்பக் கட்டணம் முறைப்படுத்தப்படுமா? இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. சில கல்லூரிகள் புதன்கிழமை (மே 6) விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலானவை விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி வசூலிப்பதை ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
அரசு உதவி பெறும் கல்லூரிகள், அரசு கல்லூரிகளில் உள்ளது போன்றே விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தக் கல்லூரிகள் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை ரூ. 250 முதல் ரூ. 500 வரை நிர்ணயிக்கின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டிலும் பல கல்லூரிகள் விண்ணப்பக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி நிர்ணயித்திருப்பது தொலைபேசித் தகவல் மூலம் தெரியவந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
விண்ணப்பக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.
Monday, May 4, 2015
New
கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment